20090603

டி.ஆர்.மகாலிங்கம் - செந்தமிழ் தேன் குரல்

நான் என்றுமே தொலைக்காட்சியின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளுக்கு (reality music shows) எதிரானவன். அதற்கான காரணங்களை முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனால் பல மொழிகளில் இந் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் என்னை அவற்றின் நடுவராக இருக்கச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! அதற்குக் கொடுக்கப்படும் பணமும் உடனடியாகக் கிடைக்கும் புகழும் மிகவும் சபலமூட்டுபவைதான். ஆனால் நான் எப்போதும் திடமாகவே முடியாதென்று சொல்லிவிடுவேன். இந்தவகையான இசைப்போட்டி நிகழ்ச்சிகள் இசையுணர்வுக்குத் தீங்கானவை என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருக்கிறது என்றாலும் சில தருணங்களில் இந்நிகழ்ச்சிகளில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

முதல் ஆச்சரியம், ஒருமுறை இப்போட்டி ஒன்றில் வென்ற ஒரு 17 வயதுப் பாடகர் அவர் ஏ.எம். ராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னது. அதைப்பற்றி ஏ.எம்.ராஜா பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், சிறுவர் வரிசைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற பாடகன் அவனுக்குப் பிடித்தமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் என்று சொன்னது. ஒரு சிறுவனின் வாயிலிருந்து அதைக்கேட்பது மிக மிக ஆச்சரியம் அளித்தது. அந்தப் போட்டியின் முதல் சுற்றை நான் யூ டியூபில் (you tube) பார்த்தபோது அவன் மகாலிங்கத்தின் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்ற மரபிசை அடிப்படையிலான உச்சஸ்தாயிப் பாடலை எந்தவிதமான கருவியிசை உதவியும் இல்லாமல் மிகத்துல்லியமாகப் பாடினான்.

டி.ஆர்.மகாலிங்கத்தைப்பற்றி முதலில் நான் எங்களூரில் இருந்த வயதானவரான லூக்கோஸ் சேட்டனிடமிருந்துதான் கேள்விப்பட்டேன். ஒருமுறை நான் சமகாலத் திரையிசை பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “இப்போதுள்ள பையன்கள் பாடுவதெல்லாம் தண்ணீர்ப் பாட்டுகள். நீயெல்லாம் தியாகராஜ பாகவதரும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய அசலான கர்நாடக சங்கீதப் பாடல்களைக் கேட்க வேண்டும்.” அவர்களின் சிலபாடல்களை அவர் பலவீனமாக நகல்செய்து பாடியும் காட்டினார். டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் தன் கண்களாலேயே பார்த்தது உண்டு என்று சொல்லி சிறுவனான என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார்.

ஞான சௌந்தரி என்ற படத்தின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக அதன் கதாநாயகனான டி. ஆர்.மகாலிங்கம் கொச்சிக்கு வந்த போதுதான் லூக்கோஸ் சேட்டன் அவரைப் பார்த்தாராம். 1948ல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு கிறித்தவ பக்திப்படம். மலையாளியான ஜோசஃப் தளியத் அதை இயக்கியிருந்தார். ஞான சௌந்தரியின் பாடல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் புகழ்பெற்றிருந்தன.

டி.ஆர்.மகாலிங்கம் கொச்சி பத்மா ஹால் திரையரங்கில் கூடிய பல்லாயிரம் ரசிகர்கள் நடுவே பேசினார். அக்கால உச்ச நட்சத்திரமான டி.ஆர்.மகாலிங்கம் எப்படி அரங்கின் பால்கனியில் தோன்றி ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார் என்று லூக்கோஸ் சேட்டன் விளக்கினார். அழகனும் பாடகனுமாகிய தங்கள் கதாநாயகனை நேரில் கண்டதும் கூட்டமே போதை கொண்டது.

ஆனால் தொண்ணூறுகளில் சென்னைக்கு வந்தபின்னர்தான் நான் உண்மையில் டி.ஆர்.மகாலிங்கத்தைக் கேட்டு ரசிக்க முடிந்தது. எச்.எம்.வி நிறுவனம் தயாரித்த Legends-TR Mahalingam என்ற இசைத் தொகுப்புக்கு ஒரு விளம்பரப்படம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அப்போது நுட்பமாகக் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பல பாடல்களின் காட்சி வடிவங்களையும் பார்க்க முடிந்தது. நடிகராக டி.ஆர்.மகாலிங்கம் என்னைக் கொஞ்சமும் கவரவில்லை. ஆனால் கர்நாடகச் செவ்வியல் ராகங்கள் முதல் எளிய மெல்லிசை மெட்டுகள் வரை, பலவகையில் அமைந்த அவரது பாடல்கள், அவரது அபாரமான பாடும் திறனை எடுத்துக்காட்டி என்னை பிரமிக்கச்செய்தன.

கடந்தகாலத்தில் தமிழ்த் திரையுலகம் கண்ட பாடக நடிகர்களில் எம்.கெ.தியாகராஜ பாகவதர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் 1950களுக்கு முந்தைய திரைப்பாடல்களை ஆய்வுசெய்யும் திரைஆய்வாளர்கள் பாடக நடிகர்களில் அனைத்துத் தளங்களிலும் பாடி, சிறப்பாக நடிக்கவும்செய்த நட்சத்திரம் பி.யு.சின்னப்பாதான் என்று சொல்கிறார்கள். டி.ஆர்.மகாலிங்கம் திரையுலகுக்கு நடிகராக வழிதவறி வந்த மிகச்சிறந்த பாடகர். தியாகராஜபாகவதர், சின்னப்பா போன்றவர்களால் நிறுவப்பட்ட கர்நாடக சங்கீத பாணியிலான திரையிசைப் பாடல் மரபை அவர் முன்னெடுத்தார்.

பின்னணிப்பாடல்களும் ஒலிப்பதிவு நுட்பங்களும் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு நாடகம் அல்லது சினிமாவின் வெற்றி என்பது அதில் எத்தனை பாடல்கள் உள்ளன, கர்நாடக சங்கீதத்தில் அமைந்த அப்பாடல்களைப் பாடக நடிகர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதைச் சார்ந்தே இருந்தது. இந்திய மேடையிலும் திரையிலும் இசையே மையமாக இருந்த ஒரு காலம் அது. அன்று பாடகர்களே நட்சத்திரங்கள்.

தென்னிந்தியாவில் நாடக மேடையில் இருந்து பெரும் பாடக நடிகர்கள் உருவானார்கள். அவர்களில் முதல் உச்ச நட்சத்திரம் எஸ்.ஜி.கிட்டப்பாதான். அவர் ஒரு அபாரமான பாடகர். நல்ல நடிகரும் கூட என்கிறார்கள். கர்நாடக சங் கீதத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல அவரது நாடகங்களால் முடிந்தது. தேவாமிர்தவர்ஷிணி போன்ற அபூர்வமான ராகங்களை அவருக்கு முன்னர் எவரும் அந்த அளவு விரிவாகப் பாடவில்லை என்று சொல்கிறார்கள்.

அவரது குரலை நாடகங்களிலும் இசைத்தட்டுகளிலும் கேட்டு ரசித்த ரசிகர்கள் அவரது இழுத்துச்செல்லும் சில்லிட்ட குரலின் தீவிரத்தை மறப்பதேயில்லை. துரதிருஷ்டவசமாக எஸ்.ஜி.கிட்டப்பா 1933இல் தன் 28ஆவது வயதில், பேசும் சினிமா வருவதற்கு முன்னரே உயிர் துறந்தார். உச்சஸ்தாயியில் அதிரும் அவரது அபூர்வமான பாடுமுறையானது இசைக்கலைஞர்கள் நடுவே ஒரு தனிப் பாணியாகப் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது.

ஒலிப்பெருக்கிக் கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் பாடகர்கள் மிக உரக்கப் பாடி அனைவருக்கும் தங்கள் குரலைக் கேட்கும்படி செய்யவேண்டிய தேவை இருந்தது. ஆகவேதான் ஆரம்ப காலப் பாடகர்கள் உச்ச தொனியில் பாடுவதற்குத் தங்கள் குரலை, கடுமையான பயிர்ச்சிகள் மூலம் தயாரித்துக் கொண்டார்கள். மிகவும் பிற்பட்ட தொழில்நுட்பமும் ஏராளமான சிக்கல்களும் இருந்தாலும் அக்கால கட்டத்து பெரும் பாடகர்கள் அற்புதமான இசையை உருவாக்கினார்கள். இன்று நம்மிடம் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமே உள்ளது. தூய கர்நாடக இசையில் தொடங்கி இன்றைய பாடலா, பேச்சா என்று அடையாளம் காண முடியாத உளறல்கள் வரையிலான நம் ஜனரஞ்சக இசையின் பரிணாமம் இசை ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது.

டி.ஆர்.மகாலிங்கத்துக்கு வருவோம். கிட்டப்பாவின் பாணியை டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு முன்னெடுத்துச்சென்றவர் எவரும் இல்லை. கிட்டப்பாவைப் போலவே டி.ஆர்.மகாலிங்கமும் அவரது பெரும்பாலான பாடல்களை அதி உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார் என்றாலும் மிகத்தாழ்ந்த ஸ்தாயிகளில் பாடுவதிலும் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. ‘நானன்றி யார் வருவார்’, ‘கண்களின் வெண்ணிலவே’ போன்றவை அத்தகைய பாடல்கள். அவரது மகத்தான வெற்றிப்பாடலான ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ (மாலையிட்ட மங்கை) அதி உச்ச ஸ்தாயியில் தொடங்கி, மென்மையான இன்னிசை ஆலாபனையாகி, அதிலிருந்து துள்ளலான தாளத்தை நோக்கிச் செல்கிறது. டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் உச்சக்கட்ட கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

அவரது குரல்வளம் பாடும் நுட்பம் போன்றவை அவரது மிகச்சிறந்த பாடல்களான ‘ஆடைகட்டி வந்த நிலவோ’ (அமுதவல்லி) போன்றவற்றில் வெளிப்படுகின்றன. அவரது சுருதி மிகமிகத் துல்லியமானது. சங்கதிகள் பற்பல எதிர்பாராத தன்மைகள் கொண்டவை. உதாரணமாக ‘காடுவிட்டு வந்த மயிலோ’ என்ற ஒரு வரியில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர் கையாளும் சங்கதியின் நுட்பம் அப்பாடலை நூறு முறை கேட்கச் செய்கிறது.

சீர்காழி கோவிந்தராஜன் டி.ஆர். மகாலிங்கத்தின் மிகச்சிறந்த ரசிகர் என்று சொல்லப்படுகிறது. மகாலிங்கத்தின் பாணியைப் பின்பற்றும் விதமாக அவர் தன்னுடைய குரலையும் பாடும் முறையையும் பயிற்சி செய்து உருவாக்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. உச்ச ஸ்தாயியில் பாடுவது என்ற அம்சத்தைத் தவிர்த்தால் இந்த விஷயம் உண்மையல்ல என்றுதான் எனக்குப்படுகிறது.

அகத்தியர் படத்தில் இரு பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்த ராஜனுடன் இணைந்து பாடியிருக்கிறார். ‘நமச்சிவாயம் எனச் சொல்வோமே’, ‘இசையாய் தமிழாய் இருப்பவனே’ ஆகிய இப்பாடல்கள் இரு பாடகர்களையும் ஒப்பிடுவதற்குச் சிறந்த உதாரணங்களாக அமைபவை. டி.ஆர்.மகாலிங்கம் சற்றும் சிரமம் தெரியாமல், துல்லியமான சுருதியுடன், சரளமான சங்கதிகளுடன், உயிரோட்டமுள்ள உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் இந்தப் பாடல்கள் வழியாக மிதந்து செல்கிறார். ஆனால் சீர்காழி கோவிந்தராஜனின் பாடும்முறை வலிந்து செய்வதாக இருக்கிறது.

என்னால் சீர்காழி கோவிந்தராஜனின் குரலையோ, பாடும் முறையையோ ரசிக்க முடிந்ததே இல்லை. வெண்கலக் குரலோன் போன்ற பல துதிகள் அவர்மேல் உள்ளன என்றாலும் அவரது குரல் சற்றும் இசைத்தன்மைகொண்டது அல்ல. அவரது குரல் எந்த நடிகருக்கும் பொருந்தியதுமில்லை, கதைச் சந்தர்ப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாடும்முறையை மாற்றியமைக்க அவரால் முடிந்ததுமில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன் போன்றவர்களுக்காக அவர் பாடியிருந்தாலும் அதிகமும் பொதுவான பின்குரலாகவே அமைந்தது அவரது பாட்டுகள்.

என்னுடைய ரசனையின்படி சீர்காழி கோவிந்த ராஜனின் குரல் இயல்பிலேயே சுருதி நடுங்கும் தன்மை கொண்டது. வீரக்கனல் படத்தில் வரும் ‘சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா?’ என்ற பாடலில் அவருடன் சேர்ந்துபாடும் சுசீலாவின் பாடும்முறையுடன் ஒப்பிட்டு இதை நாம் தெளிவாகவே உணரலாம். ‘சிரிக்கக் கூடாதா?’ போன்ற இடங்களில் அவரது சுருதி முற்றிலும் விலகுகிறது. பெரும்பாலான கீழிறங்கும் சுரங்கள் (landing notes) அவரிடம் அப்படித்தான் அமைகின்றன. பெரும்புகழ்பெற்ற ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ போன்ற பாடல்களில்கூட அவரது சுருதி முற்றிலும் விலகுவது நாம் உணரலாம். அவரது அதீதமான கமகங்கள் வலிந்துசெய்யப்படுவனவாகவும் கேட்பதற்கு நெருடலானவையாகவும் உள்ளன.

ஆனால் அகத்தியர் படத்தில் வரும் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘ஆண்டவன் தரிசனமே’ போன்ற பாடல்களைக் கேட்டால் தெரியும் அவர் ஒரு இசை அற்புதம் என்று. அவரது குரல் எப்போதும் பிசிறே இல்லாமல் நழுவிச்செல்கிறது. எந்த சுரத்திலும் சுருதிபிசகாமல் நினைத்த சங்கதிகளைப் பிறப்பிக்கிறது. ‘ஆசைகொண்டேன் அமுதமே’, ‘சங்கம் முழங்கிவரும்’ ‘இளைய கன்னியின் அழகிய வதனம்’, ‘எதிர்கொண்டு வரவேற்குதே’, ‘காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்’ ‘மதுரமான ருசி உள்ளதே’, ‘நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா’ ‘கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று’ போன்ற ஏராளமான பாடல்களில் டி.ஆர்.மகாலிங்கத்தின் இசையின் நுட்பங்களையும் அழகுகளையும் நாம் காணலாம்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது முன்னோடியும் மானசீக குருவுமான கிட்டப்பாவைப்போலவே சிறுவனாக இருக்கும்போதே மேடைகளில் பாட ஆரம்பித்தார். விரைவிலேயே அவர் பெரும் புகழ்பெற்றார். அவருக்கு அவரது உச்ச ஸ்தாயிப்பாடல்களே புகழ்பெற்றுத்தந்தன. அக்காலத்தில் ஸ்பெஷல் நாடகங்கள் என்று அழைக்கப்பட்ட இந்நாடகங்களில் சிறப்புப் பாடகராக வந்து பாடுவது அவரது வழக்கம்.

தன் 14ஆவது வயதிலேயே டி.ஆர்.மகாலிங்கம் வெற்றிகரமான நாடக நடிகராகவும் பாடகராகவும் புகழ்பெற்று அப்புகழின் வழியாகத் திரையுலகுக்குள் நுழைந்தார். அது 1937ல் ஏ.வி.எம் எடுத்த நந்தகுமார் திரைப்படம். இளம் கண்ணனின் வேடத்தில் டி.ஆர்.மகாலிங்கம் அதில் நடித்தார். பாடல்கள் புகழ் பெற்றபோதும் படம் ஓடவில்லை. தொடர்ந்து டி.ஆர். மகாலிங்கம் 10 முக்கியமற்ற படங்களில் நடித்தார், எந்தப் படமும் அவருக்கு நல்ல இடத்தைப் பெற்றுத்தரவில்லை. மனம் தளர்ந்தபோதிலும் அவர் முயற்சியைத் தளரவிடவில்லை. அப்போதுதான் ஏ.வி.எம், அன்று சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி ஸ்பெஷல் நாடக மேடையில் பெரும்புகழ் பெற்றிருந்த ‘ஸ்ரீவள்ளி’யை சினிமாவாக எடுத்தார்கள். டி.ஆர்.மகாலிங்கம் அன்று ஒரு வெற்றிகரமான நடிகராக இல்லாத காரணத்தால் அவருக்கு மிகக்குறைவான ஊதியமே பேசப்பட்டது.

1945ல் வந்த ஸ்ரீவள்ளியில் டி.ஆர்.மகாலிங்கம் முருகனாக நடித்தார், அந்தப்படம் டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு பெரிய நடிகராக நிலை நாட்டியது. அது ஏ.வி.எம் நிறுவனத்தின் பெரும் தொடக்கமாகவும் அமைந்தது. அதில்தான் டி.ஆர். மகாலிங்கம் இன்றும் பேசப்படும் ‘காயாத கானகத்தே நின்றுலாவும்’ என்ற உச்ச ஸ்தாயிப்பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார். ஏற்கனவே எஸ்.ஜி.கிட்டப்பாவால் ஸ்பெஷல் நாடக மேடைகளில் பாடப்பெற்று புகழ்பெற்றிருந்த அப்பாடலை கிட்டப்பாவின் ரசிகர்களே ஏற்றுக் கொள்ளும்படி துல்லியமாகப் பாடினார் டி.ஆர்.மகாலிங்கம். பல இடங்களில் பொன்விழா கண்ட ஸ்ரீவள்ளி டி.ஆர்.மகாலிங்கத்தை ஒரு உச்ச நட்சத்திரமாக ஆக்கியது.

1947ல் சுதந்திரம் கிடைத்ததுமே ஏ.வி.எம் அவர்களின் சமூகப் படமான நாம் இருவரை வெளியிட்டது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்கள்தான் அப்படத்தின் முக்கியமான கவர்ச்சியாக இருந்தன. ‘சோலை மலரொளியோ’, ‘வாழிய செந்தமிழ்’, ‘வெற்றி எட்டுத் திக்கும் கொட்ட’, ‘விட்டு விடுதலையாகி’ போன்ற பாரதியார் பாடல்களை அப்பழுக்கற்ற துல்லியத்துடன் பாடி அக்காலகட்டத்தையே கவர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். மதுரையில் திரையரங்கிற்கு டி.ஆர்.மகாலிங்கம் வந்தபோது ரசிகர்கள் அவரைத் தூக்கிவைத்துக்கொண்டு நடனமாடினார்கள். சுதந்திரம் கிடைத்த களிப்பும் பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளும் அந்தப் படத்தின் வெற்றியில் பெரும் பங்குவகித்த போதிலும்கூட டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

1948ல் ஏ.வி.எம் வெளியிட்ட ‘வேதாள உலகம்’ டி.ஆர்.மகாலிங்கத்தின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம். இப்படத்திலும் ஏராளமான பாரதியார் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற பாடல்கள் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் பெரும் வெற்றியை அடைந்தன.

மாபெரும் வெற்றிப்படமான ஞானசௌந்தரி அதைத் தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் அதே இயக்குநர் டி.ஆர்.மகாலிங்கத்தை நாயகனாக வைத்து எடுத்த சமூகப்படமான ‘இதய கீதம்’ ஒரு பெரும் தோல்வியாக இருந்தது. டி.ஆர். மகாலிங்கத்தின் உச்ச நட்சத்திரப் புகழ் அப்படத்துக்கு உதவவில்லை. ஆனால் அதில் அவர் பாடிய ‘வானுலாவும் தாரை நீயே இதய கீதமே’ என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் இதழ்களில் ஒலிக்கிறது.

அதைத்தொடர்ந்து வந்த லைலா மஜ்னு படமும் வெற்றி பெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் டி.ஆர்.மகாலிங்கம் அவரது வாழ்க்கையின் மிக மோசமான முடிவை எடுத்தார். அவரே படங்களை எடுத்து அவற்றில் நடிக்க முடிவுசெய்தார். மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை போன்ற படங்களை அவரே தயாரித்தார். ஜே.ஆர்.ரங்கராஜுவின் பிரபலமான நாவலை ஒட்டிய மோகனசுந்தரம் ஜி.வரலட்சுமியுடன் இணைந்து அவர் பாடிய ‘ஓ ஜெகமதில் இன்பம்’, ‘புள்ளிமானைப்போலே’, ‘கண்ணீர் தானோ’, ‘கனவிலும் உன்னை மறவேன்’ போன்ற இணைக்குரல் பாடல்களுக்காகப் புகழ்பெற்றது. ஆனால் படம் பெரும் தோல்வியடைந்தது. தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களையும் அவரே தயாரித்தார். அவை வெளியாகவே இல்லை. இக் காலகட்டத்தில் வெளிவந்த அவரது எல்லாப் படங்களுமே தோல்வி அடைந்தன. பொருளாதார ரீதியாக டி.ஆர்.மகாலிங்கம் முற்றிலும் நலிவடைந்து போனார்.

டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை அன்றைய இயக்குநர்களும் உச்ச நடிகர்களும் எல்லாம் தடுத்தார்கள். காரணம் டி.ஆர்.மகாலிங்கம் அன்று சினிமாவின் மைய ஓட்டத்தை விட்டு வெகுவாக விலகிச் சென்றுவிட்டிருந்தார். ஆனால் மாலையிட்ட மங்கை ஒரு இசைப்படம் ஆகையால் கண்ணதாசன் துணிந்து அம்முடிவை எடுத்தார்.

படம் தொடங்கியபோது கண்ணதாசனின் தி.மு.க நண்பர்கள் ஒரு பிராமணனை அப்படத்தில் நடிக்கவைப்பதாகச் சொல்லி அவரை எதிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய திராவிட அரசியல் சூழலில் பிராமண வெறுப்பு அத்தகைய உச்சத்திலிருந்தது. அவர்களை சமாதானம் செய்வதற்காக, தி.மு.கவின் கொள்கைகளை மறைமுகமாகப் புகழும் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்ற பாடலை கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் பாடச்செய்தார். இப்படத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘நானன்றி யார் வருவார்’ போன்ற காலத்தாலழியாத பாடல்கள் உள்ளன.

நானன்றி யார் வருவார் பாடலை கண்ணதாசன் மகாதேவி படத்துக்காக எழுதினாராம். எம். ஜி.ஆர் அப்பாடல் பிடிக்கவில்லை என்று நிராகரித்தார். ‘கண்மூடும் வேளையிலும்’ என்று ஏ.எம்.ராஜாவும் பி.சுசீலாவும் பாடும் பாடல்தான் அதற்குப் பதிலாக மகாதேவியில் சேர்க்கப்பட்டது.

மாலையிட்ட மங்கை படத்துக்குப் பின்னர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மதிப்பு மீண்டும் நிலைபெற்றது. ஆனால் குறுகிய காலத்துக்குத்தான். அவரைப்போன்ற பாடகநடிகர்களின் காலம் முடிந்துவிட்டிருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் யுகம் நடந்துகொண்டிருந்தது. நடிகர்கள் பாடவேண்டிய அவசியமே இருக்கவில்லை. மேலும் சமூகப்படங்களில் பாடல்களைவிட வசனங்கள் முக்கியம் என்பதனால் அவருக்கு அவை பொருத்தமாக இருக்கவில்லை.

டி.ஆர்.மகாலிங்கம் அக்கால கட்டத்து ‘நவீன’ பாடல்களுக்கு எதிராகவும் இருந்தார். கர்நாடக இசை பாணியில் அமைந்த பாடல்களையே அவர் விரும்பினார். ஏ. எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்த் திரைப் பாடல்களின் சுவையையே மாற்றி அமைத்தார்கள். பின்னணிப் பாடகர்கள் உருவாகி வளர்ந்து வந்த இந்தப் புதிய சூழலைப் புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் மகாலிங்கம் மறுத்தார். அவர், நடிகர்கள் பாட வேண்டும் என்ற மரபு முறையில் பிடிவாதமாக இருந்தார். பாடக நடிகரான டி.ஆர்.மகாலிங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

படங்களில் தான் நடிக்கும் பாத்திரங்களுக்கு தானே பாடுவேன் என்று சொல்லி தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புகளை அவரே நிராகரித்தார். பிறருக்குப் பின்னணி பாட அவர் முற்றிலும் மறுத்துவிட்டார். பாடல் இல்லாத நடிப்புக்கோ நடிப்பு இல்லாத பாடலுக்கோ தான் தயாரில்லை என்று அவர் ஒதுங்கிய காரணத்தால் சினிமா அவரைக் கைவிட்டது. அவரது இனிமையான பாடல்களைக் கேட்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தார்கள்.

பாடும் வாய்ப்புள்ள படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்தார். திருவிளையாடல் (1965), அகத்தியர் (1971), திருநீலகண்டர் (1972), ராஜராஜ சோழன் (1973) முதலியவை உதாரணங்கள். இப்படங்களிலும் அவரது அற்புதமான பாடல்கள் வரத்தான் செய்தன. திருவிளையாடல் படத்தின் ‘இசைத்தமிழ் நீ செய்த’ பாடலும் அகத்தியர் படத்தின் ‘மலைநின்ற திருக்குமரா’ பாடலும் அவை வெளிவந்த காலத்தைப் பெரிதும் கவர்ந்து இன்றும் புகழுடன் இருக்கின்றன.

சினிமாவில் தனக்கு ஏற்பட்ட சரிவைப் புரிந்துகொள்ள முடியாமல் சென்னையை விட்டு விலகி தன் சொந்த ஊரான சோழவந்தான் அருகில் உள்ள தென்கரைக்குப் போய்ச்சேர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஞான சௌந்தரி, ஸ்ரீ வள்ளி என்று பொன்விழாப் படங்களின் நாயகனாக இருந்தவர் சினிமாவை விட்டு விலகி நாடகமேடைக்குத் திரும்பினார். உச்ச நட்சத்திரமாக, பெரும் செல்வந்தராக இருந்த கடந்த காலத்தின் திரையுலக நினைவுகளுடன் டி.ஆர்.மகாலிங்கம் நாடகமேடைகளில் கடைசிவரை பாடி நடித்தார்.

1978ல் தன் 58 ஆவது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தார். ஆனால் இந்த கணம்கூட நிலாவென சிரிக்கும் செந்தமிழ் தேன் மொழியாக அவரது குரல் வசீகரம் எங்கெங்கெல்லாமோ ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


தமிழில் ஜெயமோகன்