20100821

எஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி

மழையின் அருவியில் நனைந்த ஜூன்... நனைந்து சொட்டும் பகலிரவுகள்... பள்ளிகள் திறக்கும் காலம்... குளிர்நிறைந்த பள்ளி வகுப்புகளில் அலுப்பூட்டும் பாடங்கள் முடிந்த இடைவேளைகளில் நடுநிலைப்பள்ளி மாணவர்களாகிய நாங்கள் அவசர அரட்டைகளுக்கு ஒன்று கூடுவோம். எங்கள் குமிழியிடும் பதின்பருவத்து உற்சாகத்துக்கு ஏற்றவகையில் தொடர்பே இல்லாத பலவகையான விஷயங்கள் பேசப்படும். ஆசிரியர்கள் மீதான வெறுப்பு... காமம் சார்ந்த தகவல்கள்... மலையாள திரைப்படங்கள் மற்றும் திரைநாயகர்கள் மீதான விவாதங்கள்... கூடவே இன்னும் தீவிரமான விஷயமும் ஒன்று இருந்தது... முந்தைய நாள் இரவு, வானொலியில் கேட்ட திரைப்பாடல்கள்...

எங்கள் மலைப்பகுதி ஊரில், மழைக்காலத்தின் உறையவைக்கும் குளிரில் கூரையை அறைந்து ஓலமிடும் மழையின் ஒலியைக் கேட்டபடி கம்பிளிப் போர்வைகளுக்குள் சுருண்டுகொண்டு முன்னிரவு திரைப்பாடல் நிகழ்ச்சியான 'ரஞ்சினி'யை ஒலிபரப்பும் வானொலியை நோக்கி காதுகளை குவித்துக் கேட்டுப் படுத்திருப்போம். அக்காலத்து குழந்தைகளில் பலருக்கு முக்கியமான இசையமைப்பாளர்களின் பெயர்கள் கூட தெரிந்திருந்தன. பாடல்களைப் பற்றியும் பாடகர்களைப்பற்றியும் திட்டவட்டமான கருத்துக்களும் அவர்களுக்கு இருந்தன.

அத்தகைய ஒரு அரட்டை நேரம் என் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. அக்காலத்து பாடகிகளைப்பற்றிய அனல் பறக்கும் விவாதம் அது. ஒரு நண்பன் சொன்னான், ''எனக்கு எஸ் ஜானகியின் குரலே பிடிக்கவில்லை. கீச்சுக்குரல். காதுக்குள் துளைத்துப்போவது போல இருக்கிறது சிலசமயம்.'' அதற்கு உடனே பதில் வந்தன ''உன் ஓட்டை ரேடியோவை உடைப்பிலே போடு. என் காதுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை''!. இன்னொருவன் சொன்னான், ''எனக்கு பி.சுசீலாவைத்தான் பிடித்திருக்கிறது. அவரது குரல் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கிறது''. அதை உடனே மறுத்த ஒரு 'நிபுணர்', ''பி சுசீலாவின் உச்சரிப்பு சரியில்லை. பரிதேவனத்தை பறிதேவனம் என்று பாடுகிறார். ஒரு என்பதற்கு ஒறு என்றும் வரூ என்பதற்கு வறூ என்றும் பாடுகிறார்'' என்றான்.

இன்னொரு கருத்து நக்கலாக நடுவே புகுந்தது. ''நல்ல உச்சரிப்பு என்றால் அது வாணி ஜெயராம்தான்''. வாணி ஜெயராம் தான் மலையாளத்தை தவறாக உச்சரிப்பதில் முதலிடம்! ''எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த பாடகி பி.வசந்தாதான்''! ''யாருடா அது? கோழி வசந்தாவைப்பற்றித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்...?'' [கோழியை பாதிக்கும் ஒரு வைரஸ் நோய் அது] தொடர்ந்து பலவகையான அபிப்பிராயங்கள். மாதுரி, எல்.ஆர் ஈஸ்வரி, பீ லீலா...எல்லாருக்குமே அங்கே இடமிருந்தது.

நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு பிடித்த பாடகியைச் சொல்லவேண்டுமென்றால் யாரைச் சொல்வது? அக்காலத்தில் எஸ்.ஜானகிதான் மலையாளப்பாடகிகளில் முதலிடம். அவருடைய மலையாள உச்சரிப்பு மிகவும் கச்சிதமானது. ஆனால் அந்த 'கீச்சிடலை' நானும் அவ்வப்போது உணர்ந்தபடிதான் இருந்தேன். உண்மையில் எனக்கு பி.சுசீலாவின் குரல்தான் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவருடைய பாடும்முறையைப்பற்றி அவ்வளவாக உறுதியில்லாமல் இருந்தேன். பிரபல இசையமைபபளர்களில், தேவராஜன் சுசீலாவை ஆதரித்தபோது பாபுராஜும் சலில் சௌதுரியும் ஜானகிக்கே அதிக பாடல்களை அளித்தார்கள்.

பாபுக்கா மற்றும் சலில்தாவின் இசையமைப்பே என்னை மெல்ல ஜானகிக்கு அருகே கொண்டு சென்றது என்று படுகிறது. அதைவிட முக்கியமாக ஜானகி பாடும்போது ஆழமான ஒரு உணர்ச்சிப்பெருக்கை நான் அடைந்தேன் என்று சொல்லலாம். அது ஒரு பாடகி பாடுவதுபோலவே இருக்கவில்லை. அந்தப்பாடலின் நாயகி பாடுவதுபோலவே எப்போதும் ஒலித்தது. பலமொழி திரைப்பாடல்களிலும் பலவகை இசைகளிலும் என்னுடைய அறிதல் விரிந்தபிறகு எஸ்.ஜானகிதான் தென்னிந்திய திரைப்பாடகிகளில் முதன்மையான உணர்ச்சிவெளிப்பாட்டுத்திறன் கொண்ட பாடகி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

நாற்பதுவருடங்களுக்கும் மேலாக பாடிவரும் எஸ்.ஜானகி பதினைந்து மொழிகளில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பாடல்களைப் பாடிய சாதனையாளர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்கம், ஒரியா, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, படுக மொழிகளிலும் ஜெர்மன் மொழியிலும் ஜானகி பாடியிருக்கிறார். ஐந்துதலைமுறை நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதில் ஸ்ரீதேவிக்கு மட்டும் ஐந்துமொழிகளில் பின்னணிபாடியிருக்கிரார்.

ஜானகியின் பாடலின் சிறப்பம்சம் என்ன? அவரைவிட நல்ல குரல்கொண்ட பாடகிகள் என்று பி.சுசீலா, ஜிக்கி போன்றவர்களை சந்தேகமில்லாமல் சொல்லிவிடலாம். பற்பல சுவரங்களில் இனிமையாக பறந்தலைவதில் சுசீலாவுக்கு ஈடு இணை இல்லை. சுசீலாவின் குரல் எந்நிலையிலும் காதுக்கு தித்திப்பாகவே இருக்கிறது. ஆனால் அது எப்போதுமே சுசீலாவின் குரலாகவே ஒலிக்கிறது. அப்பாடலின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை அது வளர்த்தெடுபப்தில்லை.

ஆனால் ஜானகி பாடுகையில் அந்தக் கதாநாயகியே அப்படத்து உணர்ச்சிகளுக்கு ஏற்ப இயல்பாகப் பாடுவதுபோல ஒலிக்கிறது அப்பாடல். அப்பாடலின் வரிகலிலும் இசையிலும் உள்ல உணர்ச்சிகள் எந்தவிதமான செயற்கையான நாடகத்தன்மையும் இல்லாமல் மிக இயல்பான அழுத்ததுடன் வெளிப்படுகின்றன. ஜானகி பாடி நம் நெஞ்சில் நிலைக்கும் ஏதாவது பாடலை எடுத்து இந்தக் கோணத்தில் சிந்தனை செய்து பார்த்தால் இது புரியும். அப்பாடல்களை நாம் அவற்றின் உண்மையான உணர்ச்சிக்காகவே பெரிதும் விரும்பியிருப்போம். 'பூஜைக்குவந்த மலரே வா' பாடலில் வெட்கமும் கூச்சமும் கொண்ட ஒரு காதல் வெளிப்படுகிறது என்றால் 'வசந்தகால கோல'ங்களில் நெஞ்சு கரையும் ஏக்கம். 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' பாடலில் ஆழமான தாபம். 'நினைத்தால் போதுமா' (மீண்ட சொர்க்கம்) பாடலில் அவரது குரல் அசாத்தியமான உச்சத்துக்கு போய் பிரிவின் ஏக்கம் வெளிப்படுத்துகிறது என்றால் மணிப்பயல் படத்தில் வரும் 'நான் ஆடினால்', காமச்சுவையின் எல்லைகளைத்தொடும் ஒரு கவற்ச்சி நடனப்பாடலாக ஒலிக்கிறது. உணர்ச்சிவெளிபாட்டில், கவிக்குயில் படத்தில் வரும் 'சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாலமுரளீகிருஷ்ணா பாடிய அதன் வடிவத்தை விட எவ்வளவு மேல் என்பது கூற்ந்து கேட்ப்பவற்களுக்கு தெரியும்.

எஸ்.ஜானகி 1958ல் 'மின்னுந்நதெல்லாம் பொன்னல்ல' என்ற படத்தில் எஸ் எம் சாமியின் இசையில் 'இருள் மூடுகயோ வானில்' என்ற பாடலைப் பாடியபடி மலையாள திரைப்பாடல்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் கெ.ராகவன், தட்சிணாமூர்த்தி போன்ற அக்கால இசையமைபபளர்கள் அங்குமிங்குமாக சில பாடல்களை அவரைப்பாடச்செய்தார்கள். ஆரம்பகாலத்தில் எஸ்.ஜானகியை ஒரு படத்தின் பல பாடல்களைப் பாடவைத்து முன்னிறுத்தியவர் எம்.பி.ஸ்ரீனிவாசன். தொடக்கத்தில் மலையாள உச்சரிப்பு ஜானகிக்கு பெரிய சிக்கலாகவே இருந்திருக்கிறது. ஆனால் கடுமையான உழைப்பினால் மலையாளத்தை பேசக் கற்றுக் கொண்டு உச்சரிப்பை துல்லியமாக்கிக் கொண்டார். பிற்காலத்தில் ஜானகி மலையாளத்தின் பல்வேறு வட்டார உச்சரிப்புகளையும் உச்சரிப்பின் மத சாதி வேறுபாடுகளையும் கூட சிறப்பாக பாடல்களில் கொண்டுவந்திருக்கிறார்.

1960ல் தட்சிணாமூர்த்தி பி.சுசீலாவை மலையாளத் திரையுலகுக்குக் கொண்டுவந்தார். அடுத்த இரண்டுவருடங்களில் பாபுராஜ் உள்பட ஏறத்தாழ எல்லா இசையமைப்பாளர்களாலும் ஆதரிக்கப்பட்டு சுசீலா கேரள திரைப்பாடல்களில் முக்கியமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டார். தன் முதல் எட்டு படங்களில் பாபுராஜ் எஸ்.ஜானகிக்கு ஒரு பாடலைக்கூட பாட வாய்ப்பளிக்கவில்லை. 1963ல் 'மூடுபடம்' என்ற படத்தில் 'தளிரிட்ட கினாக்கள்' என்ற பாடல் தான் பாபுராஜ் ஜானகியைப் பாடவைத்த முதல் பாடல். இன்றுவரை பாபுராஜின் மகத்தான இன்னிசை மெட்டுகளில் ஒன்றாக விளங்கும் அப்பாடலின் வெற்றியே ஜானகியின் சாத்தியக்கூறுகளை பாபுராஜுக்கும் மலையாள திரையுலகுக்கும் உணர்த்தியது.

அதேபோல சலில் சௌதுரியின் முதல் மூன்று படங்களிலும் ஜானகிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1973ல் வந்த 'ஸ்வப்னம்' என்ற படத்தில் ஜானகி பாடிய 'சாரிகே என் சாரிகே', 'மழவில்கொடி காவடி' என்ற இருபாடல்களும் அடைந்த பெரும் வெற்றியே சலில்தாவின் அபிமான பாடகியாக ஜானகியை மாற்றின. குறிப்பாக சலில்தாவின் சிக்கலான மெட்டுகளை பெரும்பாலும் ஜானகிதான் பாடியிருக்கிறார். ஜானகியின் மறக்கமுடியாத பல மலையாளப்பாடல்கள் சலில்தாவின் இசை கொண்டவை.

மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை ஜானகி பாடியிருக்கிறார். அவற்றில் பலநூறு மாபெரும் வெற்றிப்பாடல்கள் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 'உணருணரூ' [அம்மையே காணான்], 'அஞ்சனக் கண்ணெழுதி' [தச்சோளி ஒதேனன்], 'ஒரு கொச்சு ஸ்வப்னத்தின்' [தறவாட்டம்ம], 'வாசந்த பஞ்சமி நாளில்' [பார்கவி நிலையம்], 'உணரூ வேகம் நீ' மற்றும் 'மானச மணிவேணுவில்' [மூடல் மஞ்சு], 'தாமரக் கும்பிளல்லோ' [அன்வேஷிச்சு கண்டெத்தியில்ல], 'சிரிக்கும்போள்' [கடல்], 'சூரியகாந்தி' [காட்டு துளசி], 'ஆ நிமிஷத்தின்றே' [சந்திரகாந்தம்], 'ஸ்வப்னாடனம்' [துலாவர்ஷம்], 'ஸந்த்யே' [மதனோத்ஸவம்] போன்ற பாடல்கள் என் மனதில் சட்டென்று ஓடிவருகின்றன.

ஜானகியின் முதல் தெலுங்குப்பாடல் 1957 ஏப்ரல் 5 ஆம்தேதி பதிவுசெய்யப்பட்டு எம்.எல்.ஏ படத்தில் இடம்பெற்ற 'நீ ஆசா'. பெண்டியால நாகேஸ்வர ராவ் இசையில் கண்டசாலாவுடன் இணைந்து பாடிய ஒரு இணைக்குரல்பாடல் அது. இன்றும் தெலுங்கு திரைப்பாடல்களில் மறக்கமுடியாத ஒன்றாக இது நினைவுகூரப்படுகிறது. 'முரிபின்சே முவ்வலு' படத்தில் இடம்பெற்ற 'நீ லீல பாடேதா தேவா' [தமிழில் சிங்கார வேலனே தேவா] 'பாவமரிதல்லு' படத்தில் வந்த 'நீலி மேகாலலோ' ஆகிய பாடல்கள் அங்கு ஜானகிக்கு புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தவை. அதன் பின் சமீப காலம்வரை ஜானகி தெலுங்கின் முதன்மையான பாடகிகளுள் ஒருவராகவே இருந்துவந்தார். 'னேனொக பூல மொக்க', 'பகலே வென்னல', 'ஏ திவிலோ விரிசின பாரிஜாதமோ' போன்ற பாடல்கள் அவை வெளிவந்த நாள் முதல் இன்றுவரை அழியாத இனிமையை அளிப்பவையாகவே உள்ளன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த 'கள்ளல்லோ உன்னதேதோ' [தமிழில் 'கண்ணிலே என்ன உண்டு'], 'பதஹாரேள்ளகு நீலோ நாலோ' [படம்: மரோ சரித்திரா], 'அந்தமைன அனுபவம்' (படம்: அந்தமைன அனுபவம்) போன்றவை ஜானகியின் பலநூறு தெலுங்கு வெற்றிப்பாடல்களில் சட்டென்று நினைவுக்கு வருபவை.

ஜானகி கன்னடத்திலும் பல்லாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். 'பானல்லு நீனே', 'ஹூவிந்த ஹூவிகே', 'கண்களு தும்பிரலு', 'நின்ன ஸாவிநெனபே', 'ஹொஸ பாளு', 'யுக யுகாதி கலெதெரோ', 'யாவ ஜன்மத மைத்ர', 'நகு எந்திதே', 'புட்டா புட்டா', 'பரதே நேனு நின்னா', 'ஹூவொந்து பேக்கு', போன்ற அழியாப்புகழ் கொண்ட பாடல்கள் வழியாக கன்னட இசையில் என்றும் நிலைத்திருக்க்கிறார். நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களில் சிலவை இவை.

இந்தியில் அதிகமான பாடல்களைப் பாடிய தென்னிந்தியப் பாடகி எஸ்.ஜானகிதான். எந்த ஒரு தென்னிந்திய இசையமைபபளர் இந்திக்குப் பாடலமைத்தாலும் சில பாடல்களை எஸ்.ஜானகி பாட நேரிடும். ஜானகி தமிழ் மலையாளம் தெலுங்கு, கன்னட மொழிகளில் அம்மொழிகளுக்கே உரிய உச்சரிப்புகளை மிகச்சிறப்பாகக் கொண்டுவந்த பாடகியாகக் கருதப்படுகிறார். ஆனால் இந்தியிலும் அவரது உச்சரிப்பு மிகப் பொருத்தமாகவே அமைந்தது. இந்தி இசையமைப்பாளர்களான லட்சுமி காந்த் பியாரிலால், சலில் சௌதுரி, ரவீந்திர ஜெயின், ப்பபி லாஹிரி, ஆனந்த் மிலிந்த், தனிராம் பிரேம் போன்றவர்கள் எஸ் ஜானகிக்கு வெற்றிப்பாடல்களை அளித்துள்ளனர்.

கிஷோர் குமாருடன் இணைந்து பாடிய 'போல் பேபி போல் ராக் அன்ட் ரோள்' [படம்: மேரி ஜங்க்] 'சல்கே ஸாஸ் கெ நைனா' [படம்: தில் கா ஸாதி தில்] 'பாந்த் லோ குன்க்ரூ' [படம்: பத்தர் கி இன்சான்], 'கோரீ கா ஸாஜன்' (படம்: ஆக்ரி ரஸ்தா), மன்னா டேயுடன் சேர்ந்து பாடிய 'இத்னா மானா தூ மெரா' (படம்: ஆஷிக் சி ஐ டி), 'கோவிந்தம் பஜ கோபாலம்' (படம்: ஜான் ஜானி ஜனார்தன்), 'டாண்ட் ஸே நோ' (படம்: காயல்), ப்பபி லஹிரியுடன் இணைந்து பாடிய 'யார் பினா சைன் கஹான் ரே' (படம்: ஸாஹேப்), கிஷோர் குமாருடன் இணைந்து பாடிய 'ராதா ப்யார் தே ப்யார் தே' (படம் இன்சாஃப் கா ஆவாஸ்] போன்ற பாடல்கள இந்தியில் ஜானகியின் முக்கியமான வெற்றிப்பாடல்களாகச் சொல்லலாம்.

தன் இசைவாழ்வின் ஐம்பதாவது வருடத்தை சமீபத்தில் கொண்டாடிய எஸ்.ஜானகி, ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் ரெபெல்லே அருகில் பல்லேபட்லா என்ற குக்கிராமத்தில் 1938ல் ஏப்ரல் 23 ஆம் வருடம் பிறந்தார். மூன்றுவயதில் இசை கற்க ஆரம்பித்து பத்து வயதுவரை பயின்ற பின்பு, அவருக்கு இசையில் தூண்டுதலாக இருந்த தாய்மாமன் டாக்டர் சந்திரசேகரின் ஆலோசனையின்படி சென்னைக்கு குடிபெயர்ந்தார். அவரது சிபாரிசின் விளைவாக ஏ வி எம் ஸ்டுடியோவில் கூட்டுக்குரல் பாடகியாக சேர்ந்து தன் இசைவாழ்க்கையை தொடங்கினார்.

ஜானகியின் முதல் தமிழ்பாடல் வெளிவராத 'விதியின் விளையாட்டு' என்ற படத்துக்காக 1957 ஏப்ரல் மாதம் டி.சலபதி ராவ் இசையில் அவர் பாடியதாகும். ஆனால் ஜானகியை புகழ்பெற வைத்த பாடல் 1958ல் வெளிவந்த 'சிங்கார வேலனே தேவா' தான். கொஞ்சும் சலங்கை படத்துக்காக எஸ்.எம்.சுப்பையா நாயிடுவின் இசையில் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்துடன் இணைந்து அவர் பாடிய அப்பாட்டு இன்றும் தமிழ்நாட்டில் ஓயாமல் ஒலித்துவருகிறது. நாதஸ்வரத்தின் நுண்ணிய ஸ்வரஸ்தானங்களுடன் இணையும் குரலுக்காக பலவாறாக தேடியலைந்தபின் சுப்பையா நாயிடு ஜானகியைக் கண்டடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பாடலில் தென்னிந்திய இசைவிமரிசகர்களின் பாராட்டைப் பெற்ற எஸ்.ஜானகி அதன் பின், இதே முறையில் பல்வேறு மொழிகளில், உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய், எம்.கோபாலகிருஷ்ணனின் வயலின், ஹரிப்ரசாத் சௌரசியாவின் புல்லங்குழல், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதச்வரம் ஆகிய வாத்தியங்களுடன் இணைந்து சிறப்பாக பாடியிருக்கிறார்.

கன்னடத்திலும் மலையாளத்திலும் நிகழ்ந்ததுபோல தமிழில் முதல்வெற்றிக்குப் பின் ஜானகியின் இசைவாழ்க்கை உச்சம் நோக்கி செல்லவில்லை. பற்பல வெற்றிப்பாடல்களுக்குப் பின்னரும் அவ்வப்போது சில பாடல்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவரை சிலபோது மட்டுமே பாட அழைத்தார்கள். ஆனால் அவர்கள் ஜானகியை பாடவைத்தபோதெல்லாம் அபூர்வமான பாடல்கள் உருவாயின. 'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' [ஆலயமணி], 'ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கையொலி' மற்றும் 'மாலையும் இரவும்' [பாசம்], 'பூமகள் மேனி' [ஞாயிறும் திங்களும்], 'வெண்மேகமே வெண்மேகமே' மற்றும் 'அழைக்கின்றேன்' [ஆயிரம் ஜென்மங்கள்], 'ராதைக்கேற்ற கண்ணனோ' [சுமைதாங்கி], 'உலகம் உலகம்' [உலகம் சுற்றும் வாலிபன்], 'பாடாத பாட்டெலாம்' [வீரத்திருமகன்], 'சித்திரமே சொல்லடி' [வெண்ணிற ஆடை], 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' [ வறுமையின் நிறம் சிவப்பு], 'சொல்லத்தான் நினைக்கிறேன்' [சொல்லத்தான் நினைக்கிறேன்], 'இப்படியோர் தாலாட்டு' மற்றும் 'காற்றுக்கென்ன வேலி' [அவர்கள்], 'கண்ணிலே என்ன உண்டு' [அவள் ஒரு தொடர்கதை], 'மலரே குறிஞ்சி மலரே' [டாக்டர் சிவா], 'அழகுக்கும் மலருக்கும்' [நெஞ்சம் மறப்பதில்லை], 'கண்ணிலே நீர் எதுக்கு' ம்ற்றும் 'பொன்னென்பேன் சிறு பூவென்பேன்' [போலீஸ்காரன் மகள்], 'மாம்பழத்து வண்டு' [சுமைதாங்கி] ஆகியவை சட்டென்று நினவுக்குவரும் பாடல்கள். இப்பாடல்களில் எல்லாம் பலவகையான உணர்ச்சி வேகங்களை வெளிபப்டுத்தியிருக்கிறார் ஜானகி.

இளையராஜாவின் கற்பனைவீச்சை தன் குரலால் சென்று எட்டமுடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான் என்று சொல்லப்படுகிறது. அவர்களுடையது மிக வெற்றிகரமான இணைப்பாக அமைந்தது. ராஜாவின் இசையில் ஜானகி அபூர்வமான நாட்டுப்புற உச்சரிப்புடன் நாட்டுப்புறப்பெண்களுக்குரிய குழைவும் தளுக்கும் மிக கச்சிதமாக கலந்த பல பாடல்களை பாடியிருக்கிறார். ராஜாவின் முதல் பாடல்களான 'அன்னக்கிளியே உன்னைத்தேடுதே' மற்றும் 'மச்சான்ப்பார்த்திங்களா' [அன்னக்கிளி] அத்தகைய பாடல்கள். அது தமிழ் திரையிசையில் ஒரு திருப்புமுனை. சமீப காலம்வரை அத்தகைய பற்பல பாடல்களை பாடி நாட்டுப்புறமெட்டு என்றாலே நமக்கு ஜானகியின் குரலே நினைவில் நிற்கும்படி ஆகியிருக்கிறது. 'ராஜாவே உன்னைநம்பி' [முதல்மரியாதை] முதல் தேசியவிருது பெற்றுத்தந்த 'இஞ்சி இடுப்பழகா' வரை உதாரணம் சொல்லலாம்.

மரபிசையின் நுட்பமும் திரைப்பாடல்களுக்குரிய உணர்ச்சிவேகமும் கொண்ட பலபாடல்கள் நம் நினைவில் ஒலிக்கின்றன. 'காற்றில் எந்தன் கீதம்' [ஜானி], 'அழகிய கண்ணே' [உதிரிப்பூக்கள்], 'பாடும் நிலாவே' மற்றும் 'தேனே தென்பாண்டி மீனே' [உதயகீதம்], 'புத்தம் புது காலை' [அலைகள் ஓய்வதில்லை], 'நாதம் என் ஜீவனே' [காதல் ஓவியம்], 'கண்ணன் வந்து பாடுகிறான்' [ரெட்டைவால் குருவி], 'சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்' [மைக்கேல் மதன காமராஜன்], 'செந்தூரப்பூவே' [16 வயதினிலே], 'மலர்களிலே ஆராதனை' [கரும்புவில்], 'கண்மணியே காதல் என்பது' [ஆறிலிருந்து அறுபதுவரை], 'பொன்வானம் பன்னீர் தூவுது' [இன்று நீ நாளை நான்], 'மௌனமான நேரம்' [சலங்கை ஒலி], 'தென்றல் வந்து தீண்டும்போது' [அவதாரம்], 'மீண்டும் மீண்டும் வா [விக்ரம்], 'தூரத்தில் நான் கண்ட' [நிழல்கள்] என்று அப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். 'சங்கத்தில்பாடாத கவிதை' (ஆட்டோராஜா) போன்று சிக்கலான மெட்டுக்கள் கொண்ட பல பாடல்களும் ஜானகியால் பாடப்படும்போது குரல் விளையாட்டாக ஆகாமல் அப்பாடலின் உணர்ச்சிகரம் சற்றும் குறையாமல் உள்ளதைக் கவனிக்கலாம்.

இளையராஜா தமிழுக்குக் கொண்டுவந்த நுட்பமான மேலையிசை மெட்டுகளை தமிழ்க்குரலின் அழகும் இயல்பும் கெடாமல் பாடி இங்கே புகழ்பெற வைத்ததில் ஜானகியின் பங்கு மிக முக்கியமானதாகும். 'பாடவா உன் பாடலை' [நான் பாடும் பாடல்], 'ஒரு பூங்காவனம்' [அக்னி நட்சத்திரம்], 'இது ஒரு நிலாக்காலம்' [டிக் டிக் டிக்], 'இரவு நிலவு' [அஞ்சலி], 'கண்மணி அன்போடு' [குணா]', 'அன்பே வா அருகிலே' [கிளிப்பேச்சு கேட்க வா], 'ஓகோ மேகம் வந்ததோ' [மௌனராகம்], 'பருவமே புதியபாடல்பாடு' [நெஞ்சத்தைக் கிள்ளாதே] என்று பற்பல பாடல்களைச் சொல்லலாம்.

பிற இசையமைபபளர்களின் படங்களிலும் எஸ்.ஜானகி தன் தனித்திறமையை வெளிப்படுத்தி அற்புதமான பாடல்களைபாடியிருக்கிறார். கே.வி.மகாதேவன் இசையில் 'சின்னஞ்சிறிய வண்ணபறவை' [குங்குமம்], 'பார்த்த கண்கள் நான்கு' [உல்லாசப்பயணம்], 'பொன்னொளிரும்' [வாணிராணி], 'அழகுக்கு மறுபெயர்' [அன்னமிட்ட கை] போன்ற பாடல்களைச் சொல்லலாம். ஜி.கெ.வெங்கடேஷ் இசையில் ஜானகி பாடிய பல சிறந்த பாடல்கள் உள்ளன என்றாலும் எப்போதும் நினைவில் வரும் பாடல் 'தேன் சிந்துதே வானம்' [பொண்ணுக்கு தங்க மனசு] தான்.

புதிய தலைமுறை இசையமைபபளர்களின் பாடல்களிலும் ஏராளமான வெற்றிப்பாடல்களை ஜானகி பாடியிருக்கிறார். மலையாளத்தில் 1995 வரை வந்த பல புதிய பாடல்களை அவரே பாடியிருந்தார். தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எஸ்.ஜானகி பாடிய பல வெற்றிப்பாடல்கள் உள்ளன. 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ' [ஜெண்டில்மேன்], 'கத்தாழ காட்டுவழி' [கிழக்கு சீமையிலே], 'முதல்வனே' [முதல்வன்], 'நெஞ்சினிலே' [உயிரே], 'மார்கழித்திங்கள்' [சங்கமம்], 'காதல் கடிதம்' [ஜோடி], போன்றவை நினைவுக்குவரும் பாடல்கள்.

எஸ்.ஜானகி 1956ல் ஆல் இந்தியா ரேடியோவின் இசைப்போட்டியில் குடியரசுத் தலைவரிடமிருந்து இரண்டாம் பரிசு பெற்றதுமுதல் தொடர்ச்சியாக விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுக்கோண்டே இருந்தார். சிறந்த பின்னணிப்படகிக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். 1976ல் 'செந்தூரப்பூவே' [16 வயதினிலே] பாடலுக்காகவும் 1980ல் 'ஏற்றுமானூர் அம்பலத்தில்' [ஓப்போள்] என்ற மலையாளப்பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். 1984ல் 'வெண்ணல்லோ கோதாரி' [சிதாரா] தெலுங்குப்பாடலுக்காக தேசியவிருது கிடைத்தது. இது நிழல்கள் படத்தில் இடம்பெற்ற 'தூரத்தில் நான்கண்ட' என்ற பாடலின் தெலுங்குவடிவம். 1992ல் 'இஞ்சி இடுப்பழகா' [தேவர் மகன்] தேசிய விருது பெற்றுத்தந்தது. ஆந்திர அரசு விருது பத்து முறையும் தமிழக அரசு விருது ஏழு முறையும் கேரள அரசு விருது பதினான்கு முறையும் ஜானகியைத்தேடிவந்தது. ஆனால் எஸ்.ஜானகியின் நூற்றுக்கணக்கான அற்புதப்பாடல்கள் இடம்பெற்ற கன்னடத்தில் அவருக்கு எந்த மானில விருதும் வழங்கப்படவில்லை என்பது விசித்திரமாக இருக்கிறது!

தன் குரலை பலவிதமாக உணர்ச்சிகரமாக பற்பல சுருதிகளில் கச்சிதமாக மாற்றியமைக்கும் திறன் எஸ்.ஜானகிக்கு இருந்தது. குழந்தையின் குரலிலும் கிழவியின் குரலிலும் பாடியிருக்கிறார். ஜானகி கிழவியின் குரலில்பாடிய 'போடா போடா பொக்கே' [உதிரிப்பூக்கள்] போன்ற பாடல்கள் பிரபலமானவை. அவரது குழந்தைக்குரல்பாடல்கள் எல்லா மொழிகளிலும் இன்றும் ரசிக்கப்படுபவை. சிறுகுழந்தைகள், பதின்பருவப்பெண்கள் ஏன் ஆண்குரலில்கூட அவர் பாடியிருக்கிறார். இன்னொரு பாடகர் கற்பனையே செய்ய முடியாது அதை. சில பாடல்களில் பலவிதமான உணர்ச்சிகரமான தனிவிளைவுகளை உருவாக்கியிருக்கிறார். 'நாதா நீ வரும்' [சாமரம்] மலையாளப் பாடல் ஓர் உதாரணம். உணர்ச்சியால் மூச்சுதிணறத்திணற பாடப்பட்டது போலிருக்கிறது அது. அதேபோல 'மௌனமான நேரம்' [சலங்கை ஒலி] மிக அந்தரங்கமாக ஒருவருக்காக மட்டுமே பாடபப்ட்டதுபோல ஒலிக்கிறது. 'மாமா பேரு மாரி [நெஞ்சத்தை கிள்ளாதே] பாடலில் எஸ்.ஜானகி குடிசைவாழ் ஆணின் குரலில் பாடியிருக்கிறார். துயரம் ததும்பும் பாடல்கள், மெல்லிய இன்னிசைமெட்டுகள், காதல் பாட்டுகள், மரபிசைப் பாடல்கள், நடனப்பாட்டுகள், கஸல்கள், காபரே பாடல்கள், பாலுணர்வுப்பாடல்கள் என ஜானகி பாடிய பாடல்களின் வகைகளுக்கு முடிவேயில்லை.

ஜானகியின் தீவிர ரசிகர்ளை மட்டுமல்லாமல் அவரது தீவிர விமரிசகர்களையும் கண்டு வந்திருக்கிறேன். ஜானகி தன் சொந்தக்குரலில் பாடாமல் எப்போதும் கள்ளக்குரலிலேயே பாடுகிறார், இது 'மிமிக்ரி' திறனைக் காட்டுகிறதே ஒழிய இசையாகக் கொள்ள முடியாது என்று இவர்கள் சொல்வதுண்டு. அவரது குரல் உச்ச ஸ்தாயிகளில் மிகவும் சன்னமாக கிரிச்சிடும் தன்மையுடனும் கீழ் ஸ்தாயிகளில் மழுங்கிய முனகலாகவும் உள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. 'அவருக்கு குரலே இல்லாத போது பாட்டைப்பற்றி என்ன விவாதம்?' என்கிறார்கள் இவர்கள்.

இந்த விவாதத்துக்கு அடிப்படையே குரலைப்பற்றிய கர்நாடக சங்கீதமரபு சார்ந்த ஒரு முன்முடிவுதான் என்பது என் கருத்து. இசையில் குரல் ஒரு வாத்தியம் போல ஒலிக்கவேண்டும் என்பது இவர்களின் கருத்து. சுருதி கீழிறங்கினாலும் மேல் எழுந்தாலும் கச்சிதமாக அனைவருக்கும் கேட்கவேண்டும், பாடகரின் சொந்தக்குரலில் எப்போதும் ஒலித்தாகவேண்டும் என்பது போன்ற பல எண்ணங்கள் இங்கு உண்டு. ஒரு காலகட்டத்தில் கர்நாடக சங்கீதம் கூட்டாகப்பாடவேண்டிய 'பஜனை' முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தமையால் இது உருவாகியிருக்கலாம் என்று ஊகிக்கபப்டுகிறது.

இந்துஸ்தானி இசையிலும் பிற உலக இசைமரபுகளிலும் இத்தகைய எண்ணங்கள் இல்லை. குறிப்பாக மேலை இசையில் பொய்க்குரல் ['falsetto') உள்பட பற்பல குரல் உத்திகள் பாடகர்களால் கையாளப்படுகின்றன. மேலை இசையைப்பாடும்போது இந்த உத்திகளையெல்லாம் பயன்படுத்தியாகவேண்டும். பல ஒலிக்கூறுகளை பொய்க்குரலால் மட்டுமே சென்றடைய முடியும். ஒவ்வொரு குரலுக்கும் ஒரு தளம் உள்ளது, அதைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமானால் பொய்க்குரலையே நாடவேண்டியிருக்கிறது. பொய்க்குரலை சரியான ஸ்தாயியியில் சஞ்சாரம் செய்ய வைப்பது எளிய விஷயமும் அல்ல. குறிப்பாக கனத்த அடி சாரீரம் [baritone] கொண்ட ஒரு பாடகர் உச்சத்துக்குப்போய் சன்னமான பெண்குரல் போன்ற ஒன்றில் பாடவேண்டியபோது பொய்க்குரலில் பாடுகிறார். அப்போது அவரது குரல் அவருக்குரிய இயல்பான அதிர்வை விட பலமடங்கு அதிகமானதாக இருக்கவேண்டியுள்ளது. இயல்பான குரலின் அதே நேர்த்தியையும் துல்லியத்தையும் பொய்க்குரல் மூலம் அடைய முடியுமானால் அதில் எந்த பிழையும் இல்லை. அது இயல்பான சிறந்த பாட்டுமுறையேயாகும்.

தலையொலி [Head voice] இன்னொரு குரல் உத்தி. இதில் குரலின் மேல்தளம் பயன்படுத்தப்படுகிறது. இது சீராகவும் சுகமாகவும் ஒழுகும் இயல்பான உச்சகட்ட ஒலியாகும். இது ஏன் தலையொலி என்று அழைக்கப்படுகிரது என்றால் பாடப்படும் இசைக்குறிகளின் அதிர்வை பாடகர் தன் தலைக்குள் உணர முடியும் என்பதனால்தான். தலையொலி பாடப்படுகையில் குரல்நாண்கள் மூடப்பட்டு குரல் மீட்டல் முழுகையாக வெளிப்படுகிறது. தான் விரும்பிய எந்த இடத்துக்கும் குரலைக் கொண்டுபோக அந்நிலையில் பாடகரால் முடியும். தலையொலி சீரானதும் விடுபடல்கள் இல்லாததுமான குரலொழுங்கையும் ஒத்திசைவையும் அளிக்கிறது. பொய்க்குரலும் தலையொலியும் பலசமயம் ஒன்றுபோலத் தோன்றினாலும் அவை முற்றிலும் வெவ்வேறானவை. தொடர்ந்த கடும் பயிற்சியால் மட்டுமே அவற்றில் சீரான ஓட்டத்தையும் அழகையும் கொண்டுவர முடியும். எண்ணற்ற மேலைநாட்டு செவ்விசைப் பாடகர்களும் ஓபரா பாடகர்களும் மட்டுமல்லாமல் பல பாப் இசைக்கலைஞர்களும் கூட இந்த குரல் உத்திகளை கையாள்கிறார்கள். பீ ஜீஸ் [Bee Gees], ஜிம்மி சாமர்வெல் [Jimmy Somerville], ஜெஃப் பக்லி [Jeff Buckley], போனோ (U2 குழுவின் தலைப்பாடகன்) போன்றவர்களை குறிப்பாக எடுத்துச் சொல்லலாம்.

இன்று நம் சாதாரண பேச்சுக்குரலை இன்னும் நுட்பமாகவும் தீவிரமாகவும் அழகாகவும் மார்றிக்கொள்ள பற்பல உத்திகள் வந்துள்ளன. அழகிய பெண்குரல் இல்லாமல் பிறந்த எஸ்.ஜானகி இந்த உத்திகள் எதைப்பற்றியும் கேள்விப்படாதவர். ஆனால் அவர் தானாகவே முயன்று தன்குரலை பதப்படுத்தி பெண்குரலின் இனிமையையும் நளினத்தையும் வெளிக்கொணரும் பற்பல சாத்தியங்களை கண்டு கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். தான் பாடும் ஒவ்வொரு பாட்டிலும் அதற்குரிய உணர்ச்சிகளை கொண்டுவர அந்த உத்திகளை அவர் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். ஜானகி தன் பாடல்களில் ஒலிக்கவிட்ட இந்த மாறுபட்ட உணர்ச்சிவேகங்களை அளித்த இன்னொரு பாடகியை நாம் இந்திய திரைவானில் காண இயலாது என்பதே உண்மை.

எஸ்.ஜானகி பாடகியான பின், தான் எவ்வித தொடர் பயிர்ச்சியிலும் ஈடுபடுவதில்லை என்று சொல்லியிருக்கிறார்! குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் ஆகியவற்றை தவிர்ப்பதைமட்டுமே அவர் செய்துவருகிறார். ஜானகி உச்சஸ்தாயிகளில் உலவுவதை மிக விரும்பும் பாடகி. அவரது பல புகழ்பெற்ற பாடல்கள் மிக சிக்கலான குரல் உச்சங்களை தொட்டு செல்பவை. ஆனால் அவர் பாடும்போது எவ்விதமான முயற்சியும் தெரியாது. எந்த வகையான உடல் அசைவுகளையும் முகச்சுளிப்புகளையும் காணமுடியாது. அவர் முகத்தைப்பார்த்தால் அவர் பாடுவதாகக்கூட தோன்றாது. உள்ளிருந்து சுரங்கள் இயல்பாகவே ஓடி வருகின்றன!

எஸ்.ஜானகியின் அபிமான பாடகர்கள் முகம்மது ரஃபி மற்றும் லதா மங்கேஷ்கர். லதாவுடன் ஒரு பாடலுக்காக ஹைதராபாதில் சேர்ந்து பணியார்றியதை தன் மறக்கமுடியா நினைவுகலில் ஒன்றாக அவர் குறிப்பிடுகிறார். கண்டதுமே அவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்டார்களாம். பல்லாயிரம் மேடை நிகழ்ச்சிகளை நடத்திய ஜானகி 1988ல் 'மௌனப்போராட்டம்' என்ற தெலுங்கு படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். தமிழிலும் தெலுங்கிலும் பல பாடல்களை எழுதியுமிருக்கிறார்.

ஒரு சின்னஞ்சிறு மலைக்கிராமத்தில், உலகமறியாத சிறுவனாக இருந்தபோது நான் ஜானகி பாடிய 'சந்த்யே கண்ணீர் இதெந்தே சந்த்யே','ஸ்வப்னாடனம் ஞான் துடருந்நு' போன்ற பாடல்களைக் கேட்டு மௌனக் கண்ணீர் விட்டிருக்கிரேன். அவரைப்பற்றிய கடும் விமரிசனங்களைக் கேட்டு குழம்பிப்போய் மௌனம் சாதித்திருக்கிறேன். ஆனால் 1989ல், என் இருபது வயதில் அவரைப்பற்றி ஒரு பிரபல மலையாள நாளிதழில் ஒரு ரசிகக் குறிப்பு எழுதும் அளவுக்கு இசை ரசனையில் முதிர்ச்சி பெற்றேன். மேலும் பதினெட்டு வருடம் கழிந்து இன்னும் துல்லியமான, இன்னும் விரிவான ரசனையுடன், தெளிவான மதிப்பிடுகளுடன் அதே முடிவுகளை முன்வைத்து இப்பொழுது அவரைப்பற்றி மீண்டும் எழுதுகிறேன். அவரது பாடல்களில் பொங்கியெழும் உணர்ச்சியலைகளுக்கு நிகரில்லை என்றே எண்ணுகிரேன்.

லட்சக்கணக்கான ரசிகர்களை மூன்று தலைமுறைக்காலமாக பரவசப்படுத்திவரும் அப்பெரும் பாடகியை நான் பல முறை நேரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது என்பது பெருமிதமளிக்கிறது. அவருடன் சில பாடல்களில் சேர்ந்து பணியாற்றியிருக்கிரேன், என் பாடல்கள் சிலவற்றை அவர் பாடியுமிருகிறார். அந்த கிராமத்துச் சிறுவன் அவனுடைய இளம் வயது வானில் ஒளிவிட்ட நட்சத்திரமொன்றை தொட்டுப்பார்த்துவிட்டான்.

2007 ஜூலையில் எழுதியது

தமிழில் ஜெயமோகன்