20091216

இசை பாடும் தென்றலோடு...ஏ.எம்.ராஜா


இன்று நாம் கேட்கும் திரை இசை தென்னிந்திய திரையிசையின் பொற்காலத்தின் சிறந்த இன்னிசை மெட்டுகளின் சாயல் கூட இல்லாத ஒன்று. இசை என்ற பெயரில் இன்று அவதாளத்துக்குள் கலந்துகட்டி நிறுத்தப்படும் விதவிதமான ஒலிகளை சகித்துக் கொள்வது உண்மையான இசைரசிகனைப் பொறுத்தவரை துன்பமானதுதான். ஏ.எம்.ராஜா போன்றவர்களின் நேற்றைய இன்னிசை மெட்டுகளை கேட்டவர்களுக்கு இன்றைய திரையிசையில் ரசிக்க அதிகமில்லை. தேன் தடவிய வெல்வெட் மென்மை கொண்ட குரலாக ஏ.எம்.ராஜா ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் காதலர் நெஞ்சங்களையும் இசைக்காதலர் உள்ளங்களையும் ஒருங்கே ஆட்சி செய்தார். அவரது குரலில், நிலா நிரப்பிய இரவுகளின் அமைதியையும் கோடைத் தென்றலின் மென்குளிரையும் நினைவில் எழுப்பும் ஒரு மாயம் இருந்தது.

டி.எம்.சௌந்தரராஜன், கண்டசாலா, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜெ.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரை பாடல்களின் எண்ணிக்கையை வைத்தும் புகழை வைத்தும் தென்னிந்திய திரையிசையின் உச்ச நட்சத்திரங்களாகச் சொல்லலாம். மென்மையான காதலுணர்வுகளை தொட்டெழுப்பும் இன்னிசை மெட்டுகளை பாடும் தனித்திறமையால் ஏ.எம்.ராஜா இவ்வரிசையில் சற்றே தனித்து நிற்கிறார். அவருக்கே உரிய தனித்தன்மைகளாக இரண்டு கூறுகளைச் சொல்லலாம். ஒன்று அவர் பாடும்போது எப்போதும் நம்மை வந்து தீண்டும் ஆத்மார்த்தமான மன எழுச்சியும் பாடலில் உணர்ச்சிகளுக்கு அவர் கொடுக்கும் உயிரும். இன்னொன்று, அவரது இனிய மென்குரல். இவ்விரண்டு அம்சங்களும் இணைந்து ஏறத்தாழ அவரது அனைத்து பாடல்களையும் நெஞ்சை தொட்டுச்செல்லும் அனுபவங்களாக ஆக்குகின்றன.

பட்டுபோல நம்மை வருடிச்செல்லும் ஏ.எம்.ராஜாவின் குரலும் இசை பாணியும், மேலான இசை ஒருபோதும் உரத்ததல்ல என்று காட்டியபடியே உள்ளன. அவரது குரல் எந்தவிதமான முயற்சியும் தெரியாத அளவுக்கு இலகுவானது. அதே சமயம் எந்த உச்சத்துக்கும் ஆழத்துக்கும் சாதாரணமாக சென்றுவருமளவுக்கு திறன் கொண்டது...சுருதி விலகாதது... தென்னிந்திய இசைநட்சத்திரங்களில் முற்றிலும் சுருதிசுத்தமான குரல் ஏ.எம்.ராஜாவுடையதுதான். ஆகவேதான் அன்றைய பாடல்பதிவுமுறைகளில் உள்ள குறைபாடுகளையெல்லாம் தாண்டி அவரது பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் நம் செவிகளுக்கு இனிதாக இன்றும் உள்ளன.

ஏ.எம்.ராஜா ஒரு முழுமையான இசைக்கலைஞர். தென்னிந்திய இசையின் ஒரே வெற்றிகரமான 'இசையமைப்பாளர்-பாடகர்' அவர்தான். ஹேமந்த் குமாரை விட்டால் இந்தியிலும்கூட அவருக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்-பாடகரைக் காணமுடியாது. ஏ.எம்.ராஜா இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தூய இன்னிசை மெட்டு கொண்டவை, ஆனால் அவையெல்லாம் பெரும்புகழ் பெற்று அவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக நிலைநிறுத்தின. ஆடிப்பெருக்கு என்றபடத்தில் பி.சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..'என்ற பாடல்...சுசீலாவின் குரலின் உச்சத்திற்குபோகும் திறனையும் ஆழத்திற்குச் செல்லும் திறனையும் வெளிப்படுத்தும் இப்பாடலின் மெட்டு, எத்தனை நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவுகிறது என்பதை கவனித்தால் இத்தகைய மெட்டை எளிதாக நம்மைக் கவரும் ஒரு பாடலாக அமைத்து, அதன் மெட்டுக்கும் பின்னணி இசைக்கும் இடையே துல்லியமான ஒருமையை உருவாக்கியுள்ள ஏ.எம்.ராஜா எத்தனை திறன் வாய்ந்த இசையமைப்பாளர் என்பது புரியும். இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த சோபா. அது ஒரு பெரும் வெற்றி. 1960ல் வெளிவந்த 'பெள்ளி கானுக' அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக ஆக்கியது.

1959ல் வந்த 'கல்யாணப்பரிசு', இயக்குனர் ஸ்ரீதரின் முதல் படம். அக்காலத்து மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று அது. தமிழில் இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவுக்கும் அதுவே முதல் படம். ஜெமினி கணேசனை நட்சத்திரமாக்கிய படம் அது. சிவாஜி கணேசன் பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பேரில் படத்தயாரிப்பில் இறங்கியபோது ஏ.எம்.ராஜாவை 'விடிவெள்ளி' என்ற அந்தப்படத்தின் இசையமைப்பாளராக தேர்வுசெய்தார் என்பது இன்றும் நினைவுகூரப்படுகிறது. 'அன்புக்கோர் அண்ணி' 'தேன்நிலவு' போன்ற படங்களின் பாடல்கள் அவற்றின் மெட்டுகளுக்காகவே பெரும்புகழ்பெற்றவை.
ஏ.எம்.ராஜாவின் இசையமைப்பு முறையும் அவரது குரலைபோலவே மென்மையானது. அவரது மெட்டுகள் முற்றிலும் அசலானவை. ஒருகாலத்தில் தமிழ்த் திரையிசையின் ராஜாவாகவே அவர் கருதப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ.எம்.ராஜா மட்டுமே. 1952ல் தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில்'லோகநீதி' என்ற படம் வழியாக மலையாளத்தில் ஏ.எம்.ராஜா நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச்சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ.எம்.ராஜா அறுபதுகளில் அங்கு ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். [சத்யன் பிறப்பால் ஒரு தமிழர். இயற்பெயர் சத்தியநேசன் நாடார். அவருக்கும் மலையாளத்தில் உச்சரிப்புச்சிக்கல் இருந்தது]. ஜேசுதாஸ் தன் குரலாலும் மலையாள உச்சரிப்பாலும் முதலிடம் பெறும்வரை ராஜாவே முதன்மையான மலையாளப்படகராக விளங்கினார்.

ராஜா பாடிய ''பெரியாறே பெரியாறே'' போன்ற பாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. ராஜாவின் பல முக்கியமான மலையாளப் பாடல்களுக்குதேவராஜன் இசையமைத்தார். பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு' என்றபாடலில் ''என் சைனபா!'' என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலாக ஆக்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. ''ஆகாச கங்கையுடெ கரையில்..'' போன்ற பல பாடல்கள் மலையால திரையிசையின் 'கிளாசிக்'குகள்...

தெலுங்கில் ஏ.எம்.ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் 'அப்பு சேஸி பப்பு கூடு' படத்தில் இடம்பெற்ற'மூகவைன ஏமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே'] இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற'மதுர மதுரமீ சல்லனி ரேயி' 'அனுராகாலு தூரமுலாயெனா', 1957ல் 'அக்கா செல்லுலு' ப்டத்தில் இடம்பெற்ற 'அண்டு மாமிடி' போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மாரேனா' என்ற பாடல்தான். 'அலாதீன் அற்புத தீபம்' படத்தில் இடம்பெற்ற 'அந்தால கோனேட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம்' படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என தெலுங்கில் அவரது அழியாப்பாடல்களின் பட்டியலை பெரிதும் நீட்டமுடியும்.

ஏமல மன்மதராஜு ராஜா 1929 ஜூலை ஒன்றாம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் பிறந்தார். மூன்றுவயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பன் கல்லுரியில் பி ஏ முடித்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கிய ராஜா பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச்.எம்.வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வுசெய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப்பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றை கேட்க நேர்ந்த ஜெமினி எஸ் எஸ் வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப்படமான 'சம்சார'த்தில் தலைப்புப் பாடலைப்பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.

1951ல் கே.வி.மகாதேவன் ஏ.எம்.ராஜாவை அவரது 'குமாரி' என்ற படத்தில் 'அழியாத காதல் வாழ்வில்..' என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப்பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ரஃபி மற்றும் தலத் மெஹ்மூத் ஆகியோரின் பாட்டுமுறைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை போலி செய்யாமல் தன்னுடைய சுயமான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா. மிக மென்மையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பாடும்முறை அது.

'சிற்பி செதுக்காத பொற்சிலையே' 'தென்றல் உறங்கியபோதும்' போன்றவை போலான துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ.எம்.ராஜாவை தமிழில் நீங்காப்புகழ்பெறச்செய்தன. மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான 'ஆடாத மனமும் ஆடுதே', 'பாட்டு பாட வா பார்த்து பேச வா', 'ஓகோ எந்தன் பேபி' போன்ற பாடல்களிலும்கூட ஒரு மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். 'மைனர் லைஃப் ரொம்ப ஜாலி' போன்ற பாடலக்ளை கூட அவர் தன் தனித்துவம் கொண்ட பாணியில் பாடியுள்ளார். மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித்தெள்¢வுடன் இயல்பாக பாடியுள்ளார். 'மீண்ட சொற்கம்' படத்தில் வரும் 'கலையே என் வாழ்கையின்' என்ற வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல், 'தேன்நிலவு' படத்தில் வரும் ஹம்சானந்தி ராகத்தில் அமைந்த 'காலையும் நீயே' போன்ற பாடல்கள் உதாரணம்.

அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' 'கண்மூடும் வேளையிலும்' போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட 'நிலவும் மலரும்' 'இதய வானின் உதய நிலவே' 'கண்ணாலே நான் கண்ட கணமே' போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனியதுயரங்களை தொட்டு மீட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ.எம்.ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. 'மாசிலா உண்மைக்காதலே' [அலிபாபாவும் 40 திருடர்களும்] 'கண்களின் வார்த்தைகள் புரியாதோ' [களத்தூர் கண்ணம்மா] போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.

ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ.எம்.ராஜா எம்.ஜி.ஆர், என்.டி ராமராவ், நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், சத்யன், பிரேம் நசீர் போன்ற நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. எந்த நடிகருக்காகவும் அவர் தன் குரலையும் பாடல்முறையையும் மாற்றிக் கொள்ளவில்லை. அவரைப்பொறுத்தவரை பாடல் என்பது போலி செய்வதோ நடிப்பதோ அல்ல, இதயபூர்வமானது அது. பாடலை திரைபப்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக எண்ணாமல் திரைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு தனித்த கலையாக அவர் கண்டிருக்கவேண்டும். இந்த அம்சத்தால்தான் அவரது பாடல்கள் அவை இடம்பெற்ற படங்களின் காட்சிகளை மீறி, மிகை நடிப்பு, மிகை உணர்ச்சிகளின் துணை இல்லாமலேயே, இன்றும் தனித்து நிற்கின்றன.

ஏ.எம்.ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் 'பக்க இந்டி அம்மாயி' என்ற தெலுந்கு படத்தில் ஒரு இசைக்கலைஞனாக முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் 'படோஸன்' என்றபேரில் மறுஆக்கம் செய்யப்பட்டபோது கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்டி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ.எம்.ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தார்.

1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் 'அழகு நிலவின் பவனியிலே' என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா 'நான் உன்னை மணம்செய்துகொள்ள விரும்புகிறேன்' என்று அந்த பாடல்த்தாளில் எழுதி சகபாடகி ஜிக்கியிடம் கொடுத்தார். அது திருமணத்தில் முடிந்தது. தென்னிந்திய திரைவானின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர் ஜிக்கி. பி.சுசீலா போன்ற பெரும்பாடகிகள் கூட தொடக்க கால பாடல்களில் ஜிக்கியின் பாணியால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஜிக்கி ஏ.எம்.ராஜா தம்பதிக்கு ஆறு குழந்தைகள். அவர்களில் சந்திரசேகர் தந்தையின் குரல் வளம் ஓரளவு கொண்டவர்.

ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச்சென்று இந்திப்படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ஆஹ்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். 'பகுத் தின் ஹுயே' போன்ற படங்களுக்கும் ஏ.எம்.ராஜா பாடினர். ராஜாவின் பாடுமுறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் 'அதி மதுரா அனுராகா' போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். புகழ்பெற்ற பல சிங்களப்பாடல்களும் அவர் பாடியிருகிறார்.

ஏ.எம்.ராஜாவின் வெற்றி போராடாமல் கிடைத்த ஒன்று. அவருடைய திறமை காரணமாக வாய்ப்புகளும் புகழும் தேடி வந்து சேர்ந்தன. ஆனால் இந்த நிலைமை அதிகநாள் நீடிக்கவில்லை. இந்திய திரைப்படங்களில் பொதுவாக உருவான சில போக்குகளும் அதன் விளைவாக வந்த புதுப் பாடகர்களும் காரணமாக அவரது இடம் இல்லாமலாயிற்று. இந்திய திரையுலகம் பெரும் படநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்ட காலம் போய், கதாநாயக நடிகர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆயிற்று. கதாநாயக நடிகர்கள் பெரும் புகழ்பெற்றபோது அவர்களுக்கு ஏற்ப தங்கள் குரலையும் பாடுமுறையையும் மாற்றி பாடும் பாடகர்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. அத்துடன் ஏ.எம்.ராஜா சற்று கறாரான தொழில் நோக்கு கொண்டவர்.
வளைந்துகொடுப்பதும் இச்சகம் பேசுவதும் அவரது இயல்புக்கு மாறானவை. ஆகவே திரையுலகில் அவருக்கு நண்பர்கள் குறைவு. பாடுவதில் அவருக்கு இருந்த சரளம் பழகுவதில் இருக்கவில்லை. திரை இசை பற்றி அவருக்கு திட்டவட்டமான கருத்துக்கள் இருந்தன, அவற்றில் அவர் சமரசம் செய்யவும் விரும்பவில்லை. அவர் பின்வாங்க நேர்ந்தமைக்கு இதெல்லாம்தான் முக்கியமான காரணம்.

இயக்குநர் ஸ்ரீதர் ஒருமுறை நினைவுகூர்ந்தார், தேன்நிலவு படத்துக்கு இசையமைக்கும்போது ஏ.எம்.ராஜா அவரது மெட்டில் ஒரு சிறு ஒலிக்குறிப்பைக்கூட மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். கண்னதாசனின் பல்லவி, இசையுடன் இசைவதற்கு ஒரு சிறிய மாற்றம் தேவைப்பட்டது. ஏ.எம்.ராஜா பிடிவாதம் செய்யவே கண்ணதாசனே பல்லவியை மாற்றிக் கொண்டார். அவருடன் சேர்ந்து இயங்கிய பல இசைக்கலைஞர்கள், அவர் பாடல்களை அமைக்கும்போது விட்டுக்கொடுக்காத பிடிவாதம் கொண்டவர் என்பதை சொல்லியிருக்கிரார்கள்.

தேன்நிலவு படத்துக்கான பாடல்களை அமைக்கும்போது ஸ்ரீதருக்கும் ஏ.எம்.ராஜாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. படத்துக்கு பின்னணி இசையமைக்க ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். பிரச்சினை எம்.ஜி.ஆர் வரை சென்று அவர் கட்டாயப்படுத்தியதனால் ஏ.எம்.ராஜா அதற்கு ஒப்புக்கொண்டார். அடுத்தபடமான 'நெஞ்சில் ஓர் ஆலய'த்துக்கு இசையமைக்க ஸ்ரீதர் ஏ.எம்.ராஜாவைக் கேட்டுக்கொண்டாலும் ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். ஆகவே வாய்ப்பு விஸ்வநாதன்-ராமமூர்த்திக்குப் போயிற்று. மறக்கமுடியாத பாடல்களை கொடுத்த ஸ்ரீதர்-ஏ.எம்.ராஜா கூட்டு அங்கே முடிந்தது. உண்மையில் என்ன நடந்தது என்பதெல்லாம் இன்றுவரை ஊகங்களே.

சாதனையாளர்களை மறப்பதிலும் புறக்கணிப்பதிலும் திரையுலகுக்கு தனக்கே உரிய வேடிக்கையான வழிகள் உண்டு. மேதைகள் புறக்கணிப்பின் இருளில் உழலும்போது திரையுலகு அரைகுறையாளர்களை தூக்கிப்பிடிக்கிறது. திரையுலகத்தின் வணிக வேகத்தில் பலசமயம் மேதைகளுக்கு இடமிருப்பதில்லை. ஏ.எம்.ராஜா அவரது சாதனைகள் மறக்கப்பட்டு திறமை புறக்கணிக்கப்பட்டபோது, தன்னை மெல்ல திரையுலகிலிருந்து விலக்கிக்கொண்டார். கூடவே ஜிக்கியையும் புகழின் உச்சியிலிருந்தபோதே திரையுலகிலிருந்து விலகச்செய்தார் என்பது அவர் செய்த பெரும் பிழை என்று பலர் கூறுகிரார்கள்.

ஏ.எம்.ராஜா தன் திறமையிலும் தன் கருத்துக்ளிலும் திடமான நம்பிக்கை உடையவர், ஆகவே அவர் எதற்காகவும் வருந்தவோ தயங்கி நிற்கவோ இல்லை. அவருக்கு, ஆரம்பகாலத்தில் அவர் நடத்திய வாடகைக் கார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. ஜிக்கியுடன் இணைந்து இந்தியாவிலும் உலகமெங்கும் அவர் தொடர்ந்து மேடைநிகழ்ச்சிகள் நடத்திவந்தார். அவரது இசைக்குழுவில் கொஞ்சகாலம் இளையராஜா கித்தார் வாசித்தார். திரையிசையில் உச்சியில் இருக்கும்போதே ஏ.எம்.ராஜா வாடகைக்கார் தொழிலையும் செய்து வந்தார் என்பது அவருக்கு திரையுலகுமீதிருந்த அவநம்பிக்கையை காட்டுகிறது. அது தன் உலகமல்ல என்று உள்ளூர அவர் உணர்ந்திருக்கலாம்... அவருக்குள், மிக ஆழத்தில் ஒரு அமைதியின்மை, ஒரு வலி ஒளிந்திருந்திருக்கவேண்டும்.... அதுதான் அவரைக் காதலின் வலியையும் தாபத்தையும் அத்தனை நுட்பமாகவும் உருக்கமாகவும் தன் பாடல்களில் வெளிப்படுத்தும்போதே தன் வெளித்தோற்றத்தில் கடுமையையும் கண்டிப்பையும் காட்டச்செய்தது என்றும் இருக்கலாம்.

பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைபபளர் வி.குமார் ஏ.எம்.ராஜாவை அவரே அமைத்துக்கொண்ட அஞ்ஞாதவாசத்திலிருந்து மீட்டு பாடவைத்தார். 'ரங்கராட்டினம்' படத்துக்காக ஏ.எம்.ராஜா பாடிய 'முத்தாரமே உன் ஊடல் என்னவோ?' அன்று மிகப்பெரிய ஒரு அலையாக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டது. 'புகுந்த வீடு' படத்துக்காக ராஜா பாடிய 'செந்தாமரையே செந்தேனிதழே...' அடுத்த அலை. இரு பாடல்களுமே சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973ல் 'வீட்டுமாப்பிள்ளை' படத்தின்வழியாக இசையமைப்பாளராகவும் ஏ.எம்.ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த 'ராசி நல்ல ராசி'' ஒரு வெற்றிப்பாடல். 1975ல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும்ஏ.எம்.ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970ல் ஏ.எம்.ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970ல் 'காதலெனும் காவியம்' முதல் 1993ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்னவண்ண மெட்டெடுத்து' வரை அந்த பயணம் நீண்டது.

1987ல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் அளித்த பேட்டியொன்றில் ஏ.எம்.ராஜா ஒரு பாடகராகவும் இசையமைப்பாளராகவும் தன் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். "என் பாடல்கள் காலம் கடந்தும் நினைக்கப்படுகின்றன, நேசிக்கப்படுகின்றன. இன்றும் நான் அவற்றை மேடையில் பாடி புகழுடனூம் செல்வத்துடனும் வாழமுடிகிறது. இசைவாழ்வில் வந்த பின்னடைவுகள் பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை" என்றார். சற்று தத்துவார்த்தமாக ஏ.எம்.ராஜா சொன்னார், "அதெல்லாம் விதி! கல்யானப்பரிசு, தேன்நிலவு போன்ற படங்களில் இசையமைத்ததைவிட இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம், செய்ய இப்போதும் என்னால் முடியும் என்றே உணர்கிறேன். ஆனாலும் எல்லாம் திருப்தியாகவே உள்ளன. பாடகராக, இசையமைப்பாளராக வாழவேண்டுமென்று விரும்பினேன், வாழ்ந்தேன்" என்றார் ஏ.எம்.ராஜா.

ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டுதான் இருந்தார். 1989 ஏப்ரல் எட்டாம்தேதி கன்யாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் ரயிலை தவறவிட்டுவிட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் ரயில் நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார். ஜிக்கி ரயிலில் அமர்ந்து ஜன்னல்வழியாக அந்தக் காட்சியை பார்கக் நேர்ந்தது.

நம் தனிமைகளில் இனிமையாக, ஆறுதலாக ஒலிக்கும் ஏ.எம்.ராஜாவின் பாடல்கள்....திங்களுறங்கிய போதும் தென்றலுறங்கியபோதும் உறங்காமல்* நம் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது மென்மைக் குரல்....தென்னிந்திய திரையிசையின் நிகரற்ற அந்த இனிமைக்குரலுக்கு அஞ்சலி.

தமிழில் ஜெயமோகன்