20110112

பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்

மிதமானதொரு பிற்பகல் பொழுது. இதமான தென்றல் மர இலைகளின்மேல் படபத்துக்கொண்டிருந்த்து. அடர்ந்த மரநிழல்களாக பரந்து விரிந்து கிடந்த்து உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் உணவகத்தின் விசாலமான முன்பக்கம். அங்கிருக்கும்போது சென்னை நகரமே அமைதியில் மூழ்கியிருப்பதைப் போல் தோன்றும். ஏற்கனவே ஒன்றிரண்டு சன்னா பட்டூராக்களை தின்று முடித்து, நாலைந்து பில்டர் காஃபியும் குடித்து விட்டிருந்தேன். ஆயினும் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்து சேரவில்லை. “எப்போதுமே இந்த நேரத்துக்கெல்லாம் வந்துவிடுவார், இன்று ஏதோ தாமதமாகிவிட்டது, ஆனால் நிச்சயம் வந்துவிடுவார்”” என்று கடந்த 45 வருடங்களாக பெரும்பாலான நாட்களில் அவரை அங்கே சந்தித்து வரும் நபர் ஒருவர் கூறினார். இருமருங்கும் மரங்கள் அடர்ந்த உள்சாலையின் ஊடே வந்து கொண்டிருக்கும் வாகனங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு காரிலிருந்து இறங்கி, முதியவர்களின் தள்ளாடும் நடையுடன் மெது மெதுவாக நடந்து வந்தார் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

எண்பது வயதுக்குரிய தளர்ச்சி உடலிலும் நடையிலும் தென்பட்டாலும், வண்ணமயமாக, அலங்காரம் மிக்க ஆடைகளை அணிந்திருந்தார். செம்பழுப்பு நிற கட்டம்போட்ட சட்டைப்பையில் பலவண்ணங்களில் ஏறத்தாழ 10 பேனாக்கள் வைத்திருந்தார். பளபளக்கும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் தோளில் அணிந்திருந்த சால்வை அவரது வெள்ளை நிற பேண்ட் வரை தொங்கிக்கொண்டிருந்தது. நீள்வடிவ முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும் தெளிந்த மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தலையில் தங்கநிற மைசூர் தொப்பியணிந்திருந்தார். நெற்றியில் நீளவாக்கில் மெலிதான காவித் தீற்றல். அங்கிருந்த பலரும் அவருக்கு வணக்கம் சொல்லி நகர்ந்து கொண்டிருக்க, நான் அவரை நோக்கி நடந்து அவரது பாதங்களைத் தொட்டு மரியாதை செய்தேன். என்னை அறிமுகம் செய்த போது ’குறச்சு தாமஸிச்சு.. க்‌ஷமிக்கணம்’ என்று மலையாளத்தில் காத்திருக்க வைத்ததற்கு வருந்துவதாக கூறினார். ஓரமான ஓரிடத்தில் அமர்ந்தோம். நான் எனது புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.

சொல்லில் அடங்காத இசை என்ற என்னுடைய முதல் தமிழ் புத்தகத்தின் அறிமுக விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவேண்டி அவரை அழைப்பதற்காகவே நான் அங்கு சென்றிருந்தேன். கனிவான முகபாவத்துடன் புத்தகத்தை புரட்டிக்கொண்டே கட்டுரைகளின் தலைப்புகளுக்கேற்றவாறு ஓரிரு வார்த்தைகளில் தனது கருத்தையும் வெளிப்படுத்தினார் பி.பி.எஸ். “சலில் சௌதுரி ...என்ன ஒரு இசையமைப்பாளர்!”..மெஹ்தி ஹஸன்...உங்க தலைப்பு போலவே அவர் கஸலின் கடவுளே தான்!”...ராஜ்குமார்...அற்புதமான பாடகர்.. சிறந்த மனிதர்..., எஸ்.ஜானகி... என்ன சொல்வது அவரைப் பற்றி!....தலைசிறந்தவர்.... ஏ.எம்.ராஜா, என்ன ஒரு அசாத்தியமான பாடகர்!....” என்று சொல்லிக்கொண்டே வந்தார்.

பக்கங்களைப் புரட்டி முடித்ததும் “இது ஒரு மிகச் சிறந்த முயற்சி”” என்று என்னிடம் சொன்னார். அவரைப் பற்றி மட்டும் ஏதும் கட்டுரைகள் இல்லாததால் அவரது முகத்தில் மெலிதான ஏமாற்றம் தென்பட்டதைப் போல் உணர்ந்தேன். இருப்பினும் விழாவுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டார். தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல இதே உட்லேண்ட்ஸுக்கு ஒருவரை அனுப்பினால் போதும் என்று சொன்னார். ஆனால் விழா நாளான 2008 ஏப்ரல் 12ம் தேதி அன்றே ஒரு நீதிமன்ற உத்தரவினால் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் என்றென்றைக்குமாக மூடப்பட்டது!

அன்றைக்கு நான் அவரை அழைத்தபோது அவரது குரலில் துயரம் தோய்ந்து கிடந்தது. கடந்த 46 வருடங்களாக தினமும் சென்று வந்து கொண்டிருந்த, தனது வீடல்லாத வீடாக இருந்த உட்லேண்ட்ஸ் மூடப்பட்டதில் அவர் மிகவும் வருந்தினார் எனப்பட்டது. விழாவுக்கு வரமுடியாமற்கூட போகலாம் என்று சொன்னார். தொடர்ந்து நான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்ததால், கடைசியில் அதே சாலையில் இருந்த வேறொரு உணவகத்திலிருந்து தன்னை அழைத்துக் கொள்ளச் சம்மதித்தார்.

விழா ஆரம்பிப்பதற்கான நேரம் கடந்து கொண்டிருந்தது. அவரை அழைக்கச் சென்றவரும் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டிருந்தார். தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற நினைவூட்டல்களைப் பொருட்படுத்தாமல் தனது பலவகையான பேனாக்களை பயன்படுத்தி பி.பி.எஸ் எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். விழாவைத் தொடங்குவதற்கான அவசரத்தில் நான் அவரை அழைத்தேன், ஆனால் அவரோ மிகவும் சாதாரணமாக எனக்கு மேடையில் வழங்குவதற்காக ஒரு வாழ்த்துப்பா எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர் கலந்து கொள்ளும் இத்தகைய விழாக்களில் எல்லாம் கண்டிப்பாக அவர் செய்யும் காரியம் இந்த வாழ்த்துப்பா எழுதி வழங்குதல். எழுதி முடித்ததும் வருகிறேன் என்றார்!

அவர் எழுதியிருந்த வாழ்த்தை மேடையில் என்னிடம் வழங்கினார். புத்தகத்தைப் பற்றி சிறப்பான வார்த்தைகளில் புகழ்ந்துரைத்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். தங்களது கடந்த கால நினைவுகளில் இரண்டு பேரும் அவ்விழாப் பொழுதை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தனர். பேசி முடித்ததும் பி.பி.எஸ் உடல் நலமில்லையென்று கிளம்பினார். உடன் மேடையில் இருந்த இளம் பாடகர் கார்த்திக் ’காலங்களில் அவள் வசந்தம்”’ பாடலிலிருந்து சிலவரிகளை பி.பி.எஸ்ஸை சிறப்பிக்கும் வகையில் பாடினார். அதோடு உற்சாகமடைந்தவராக மகிழ்வுடnnnன் மேடையிலிருந்து சென்று விட்டார்.

’காலங்களில் அவள் வசந்தம்’ போன்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பல பாடல்கள் அழியாத உணர்வாக, நமது திரையிசையின் வசந்த காலமாக என்றென்றும் நம் நினைவில் நிற்கக் கூடியவை. அவரது குரலும் பாடும் பாணியும் நமது இசையனுபவத்தின் நீங்காத பகுதிகளாக இன்றும் இருக்கிறது. ஓங்கும் குரல் வெளிப்பாட்டை விட, உணர்ச்சிக்கொந்தளிப்பை விட சின்னஞ்சிறிய இசை நுணுக்கங்களுக்கும், விவரணைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வட இந்திய பாணியிலான பாடும் முறையை அடியொற்றிப் பாடியவர் அவர். இசையின், பாடல் வரிகளின் மென்மையான உணர்வுகளை வெளிக்கொணர்வதில் அதிகமும் கவனம் செலுத்தியவர். எனவேதான் எம் எஸ் வி போன்ற இசையமைப்பாளர்களின் பல மெல்லிசைப் பாடல்களுக்கான விருப்பப் பாடகராக பி.பி.ஸ்ரீனிவாஸ் மாறினார்.

"நீங்கள் பாடும் போது அது கேட்பவர்களின் காதுகளை மட்டுமல்லாது உள்ளத்தைத் தொடுவதாக இருக்கவேண்டும்" என்பது தான் தனது தத்துவம் என்று சொன்னவர் பி.பி.எஸ். கர்நாடக இசை வியாபித்திருக்கும் குடும்பத்திலும், சூழலிலும் பிறந்து வளர்ந்தாலும் ஹிந்துஸ்தானி இசையின் மெல்லிசை வடிவங்களான கஸல், தும்ரி போன்றவற்றிலும், முகம்மது ரஃபி, மன்னா டே, தலாத் மெஹ்மூத் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய அக்காலத்தைய இந்திதிரைப் படப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவற்றிலிருந்து பெற்ற தாக்கமே அவருடைய பாடும் முறையில் வெளிப்பட்டது. இந்த பாணியினாலேயே 1950களில் இருந்து 1970கள் வரை தென்னிந்திய திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருந்தார் பி.பி.எஸ். இந்திய திரையிசையின் பொற்காலமாக கருதப்படும் அக்காலத்தின் தவிர்க்க முடியாத பாடகராக விளங்கியவர் அவர்.

பிண்ணனிப் பாடகர் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Play Back Singer என்பதன் முதல் எழுத்துக்களான PBS தனது பெயரின் சுருக்கமாக இருப்பதால் தான் மட்டுமே உண்மையான ’பிண்ணனிப் பாடகர்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவார் பி.பி.ஸ்ரீனிவாஸ். பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் என்பதே அவரது முழுப்பெயர். செப்டம்பர் 22 1930ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடாவில் பிறந்தவர். தந்தை பணீந்திர ஸ்வாமி, நடுத்தர வர்க்க அரசு ஊழியராக இருந்தார். தாயார் சேஷகிரியம்மா இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த குடும்பத்தலைவி. இசையில் விருப்பமுடையவராக இருந்த பி பி எஸ் தனது தாயார் ஈர்ப்போடு பாடும் எளிமையான செவ்வியல் ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசையார்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.

சிறுவயதில் தனது அருகாமையிலுள்ள வீட்டில் வசித்த ஓர் சிறுமிக்கு கர்நாடக இசையாசிரியர் ஒருவர் எவ்வித உணர்ச்சி வெளிப்பாடுகளோ, ரசனையோ இல்லாமல் நடத்தி வந்த இசைப்பாடத்தைக் கேட்ட பி.பி.எஸ் கர்நாடக இசை வடிவத்தையே வெறுக்க ஆரம்பித்தார். கர்நாடக இசை என்பது எந்திரத்தனமான, உணர்ச்சியில்லாத ஒரு இசை வடிவம் என்று அவர் மனதில் பதிந்து போனது.
இதன் காரணமாகவே அவரது கவனம் வடநாட்டு இசையின் பக்கம் திரும்பியது. அப்போதைய அருமையான பல இந்தித் திரைப் பாடல்களையே தனது ஆசிரியர்களாகக் பாவித்தார் பி.பி.எஸ். அவற்றை சிரத்தையுடன் செவிமடுத்து பாடலின் ஒவ்வொரு நிமிடத்துணுக்கையும் பாடிப்பாடி தனது புலமையில் திருப்தி பெரும் வரை பயிற்சி செய்தார். இதைத்தாண்டிய பெரும் இசைப் பயிற்ச்சி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தாய்மாமா கிருஷ்ணமாச்சாரி மேடை நாடகங்களை இயக்கி நடிப்பவராக இருந்தார். இசையிலும் ஈடுபட்டிருந்தார். அவருடைய தூண்டுதலால் 12ஆவது வயதிலேயே மேடையில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவரது தந்தையார் பி பி எஸ்ஸின் இந்த இசை ஈடுபாட்டால் கவலையடைந்திருந்தார்.

மேலும் பிரபலமான ஜோதிடர் ஒருவர் பி பி எஸ்ஸின் ஜாதக பலனின் படி இசைத்துறையில் நுழைந்தால் அவரது வாழ்வு முற்றிலுமாக வீணாகிவிடும் என்று கூறியிருந்தார். ஆனால் துடிப்பான ஸ்ரீனிவாஸ் "உங்களது எல்லா ஜாதக முன்னறிவிப்புகளும் நிறைவேறியிருக்கிறதா?" எனக் கேள்வி கேட்டு சவால் விடுத்தார். ஜோதிடரிடம் திடமான எந்த பதிலும் இருக்கவில்லை. பிற்காலத்தில் "ஜாதக பலம்" எனும் படத்தில் பாடியதிலிருந்து தான் பி பி ஸ்ரீனிவாஸின் திரையிசை வாழ்வு உச்சத்தை நோக்கிச் சென்றது என்பது சுவாரசியமான தற்செயல்.

அவரது தந்தை, ஸ்ரீனிவாஸ் ஒரு வக்கீலாகவோ அரசு ஊழியராகவோ ஆகவேண்டும் என விரும்பினார். சிலவருடங்களில் பி.காம் முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேருவதற்காக சென்னை வந்தார் பி பி எஸ். படிப்பில் குறைவாகவே கவனம் செலுத்தியவராக, ஈமனி சங்கர சாஸ்திரி எனும் தனது குடும்ப நண்பரைச் சந்திப்பதற்காக அடிக்கடி ஜெமினி ஸ்டூடியோவுக்குச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார். ஈமனி ஒரு வீணை வித்வான். ஜெமினியில் இசைத்துறையின் தலைவராக இருந்தார். சட்டப் படிப்பின் முதல் வருடம் முடிவதற்குள் படிப்பை நிறுத்திவிட்டு சாஸ்திரியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பி பி எஸ். ஜெமினியின் உரிமையாளரான எஸ்.எஸ்.வாஸன் ஸ்ரீனிவாஸின் குரலையும் பாடும் முறையையும் வெகுவாக ரசித்து தனது படங்களில் வாய்ப்புத்தருவதாகச் சொன்னார். ஏ.எம்.
ராஜாவையும் திரையிசைக்குள் அறிமுகம் செய்ததும் எஸ்.எஸ்.வாஸனே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி தயாரிப்பில் 1952ல் வெளியான மிஸ்டர் சம்பத் எனும் இந்திப்படத்தில் முதன்முதலாக பி பி எஸ் ஓரிரு தனித்த வரிகளையும் கூட்டுக்குரல் வரிகளையும் பாடினார். பெண்குரல்களுக்கு முக்கியத்துவம் இருந்த "அஜி ஹம் பாரத் கி நாரி" மற்றும் "சலோ பனியா பரன் கோ" என்ற அப்பாடல்களில் அவருடன் இணைந்து பாடியவர்கள் கீதா தத், சம்ஷாத் பேகம் மற்றும் ஜிக்கி! மூவருமே அப்போது நட்சத்திரப் பாடகிகள்! இந்திமொழியுடன் பிணைப்பில்லாத ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியிலிருந்து வந்திருந்தாலும் பி பி எஸின் இந்தி உச்சரிப்பு சிறப்பானதாகவே இருந்தது.

அடுத்த வருடமே மூன்று மொழிகளில் வெளியான ஜாதகம் (தமிழ்) ஜாதகபலம் (தெலுங்கு), ஜாதகபலா (கன்னடா) எனும் படங்களில் இரண்டு தனிப் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். தமிழில் ’சிந்தனை என் செல்வமே’,’மூட நம்பிக்கை
யாலே’ எனும் அந்த இரண்டு பாடல்களும் மூலப்படமான கிஸ்மத் எனும் புகழ்பெற்ற இந்திப் படத்தில் வந்த மெட்டுக்களில் அமைந்திருந்தது. இப்பாடல்கள் மூலமே பிண்ணனி பாடகர் எனும் முக்கிய இடத்தைப் பெற்றார் பி பி எஸ்.

அடுத்த வருடம் விடுதலை எனும் படத்தில் ’அன்போடு இன்பமாக’ எனும் பாடல் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் வெளிப்பட்ட அவரது பாடும்முறையின் பாங்கும் அவருடைய தனித்துவமான பாணி என்று சொல்லக்கூடியவற்றின் சாயல்களும் இப்பாடலில் இடம்பெற்றிருந்தது. இதே வருடத்தில் பி.எஸ்.திவாகர் இசையமைப்பில் வெளியான ’புத்ர தர்மம்’ படத்தின் வழியாக மலையாள சினிமாவிலும் நுழைந்தார்
பி பி எஸ்.

விரைவிலேயே மலையாளத்தில் தனக்கான இட்த்தை உருவாக்கினார். "மஹல் தியாகமே" (ஹரிச்சந்த்ரா), 'கத பறயாம்' (உம்மா), 'பாவன பாரத’ (சீதா), 'மன்னவனாயாலும்" (சத்யபாமா), 'இனியொரு ஜன்மமுண்டோ' மற்றும் "பலியல்லா எனிக்கு வேண்டது" (ரெபேக்கா), ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரின் இசையமைப்பில் ஆயிஷா பட்த்தில் வெளிவந்த 'யாத்ரக்காரா போவுக போவுக', போன்ற பாடல்களும், அழியாப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பாபுராஜின் இசையமைப்பில் வந்த 'கீதே ஹ்ருதய சகீ' (பூச்சக்கண்ணி), 'இணக்குயிலே இணக்குயிலே' (காட்டுதுளசி) பாடல்களும் மலையாளத் திரை இசையின் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்கள்.

சலில் சௌதுரியின் இசையமைப்பில் அவர் பாடிய ஒரே பாடலான ‘ராத்றி ராத்றி’ (படம் – ஏழு ராத்றிகள்) பி பி எஸின் ஆழ்ந்த அடிக்குரலின் சாத்தியங்களை முற்றிலுமாக பயன்படுத்திய பாடலாகும். அவரது மிகமிகப் பிரபலமான மலையாளப் பாடல் என்பது பாபுராஜ் இசையமைப்பில், நிணமணிஞ்ஞ கால்ப்பாடுகள் படத்தில் இடம்பெற்ற "மாமலகள்க்கப்புறத்து" தான். இப்பாடல் தாய் மண்ணை விட்டு வெளிநாடுகளில் வாழும் பல லட்சம் மலையாளிகளின் தேசிய கீதம் போல் இன்றும் ஓலிக்கும் பாடல். தனது மலையாள நாட்டைப் பற்றிய ஏக்க நினைவுகளில், அதன் அழகிய கனவுகளில் ஆழ்ந்திருப்பவர்களை பற்றிய பாடல் இது.

கண்டசாலா பேராதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தெலுங்கு திரையிசையில், 1956ம் ஆண்டு வெற்றி பெற்ற தனது முதல் பாடலைப் பாடினார் பி பி எஸ். எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைப்பில் வெளியான ’பலே ராமுடு’ எனும் படத்தில் இடம்பெற்ற ’பயமேலே ஓ மனசா’ எனும் பாடல் அது. இதன் தமிழ்ப்பதிப்பு தான் பிரேம பாசம் படத்தில் அவரே பாடிய ’அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது’. தெலுங்கின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜேஸ்வர ராவ் இதைப்பற்றி ஒருமுறை,"கண்டசாலா இருக்கும்போது ஏன் பி பி எஸ்ஸை கொண்டுவந்தீர்கள் என பெரும்பாலோர் கேட்டனர். ஸ்ரீனிவாஸின் ஆழமான குரலும் அதன் மென்மையான நடையும் எனக்குப் பிடித்திருந்தது. இது புதுமையானதாகவும் கண்டசாலாவிலிருந்து ஒரு சிறந்த மாற்றமாகவும் இருக்கும் எனப்பட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆயினும், பி பி எஸுக்கு அவரது தாய்மொழியில் மிகப்பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. வெகு குறைவான பாடல்களே அவருக்கு அங்கே கிடைத்தது. அவற்றில் 'மனசுலோனி கோரிக' (பீஷ்மா), 'ஓஹோ குலாபி பாலா' (மஞ்சி மனிஷி), 'புஜ்ஜி புஜ்ஜி பாப்பாயி' (ஆட பர்த்துலு), 'வெண்ணல ரேயி' (பிரேமிஞ்சி சூடு), 'ஒஹோ சிட்டெம்மா' (அசாத்யுடு) மற்றும் ’அன்தால ஓ சிலகா’ (லேத மனசுலு) - தமிழில் டி.எம்.எஸ் பாடிய அன்புள்ள மான்விழியே- போன்ற பாடல்கள் இன்றும் வெகுவாக ரசிக்கப்படுபவையே.

1956 ஆம் ஆண்டு கன்னட்த்திரையின் உச்ச் நட்சத்திரமான ராஜ்குமார் நடித்த 'ஒஹிலேஷ்வரா" எனும் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் முக்கியமானதொரு பாடலைப் பாடினார் பி பி எஸ். அதுவரை ராஜ்குமாரின் பாடலுக்கு பிண்ணனிக் குரலாக கண்டசாலாவே இருந்து வந்தார். ராஜ்குமார் கூட ஒருபாடலை அந்த படத்தில் பாடியிருந்தார். எனினும் ராஜ்குமார் உட்பட அனைவருமே பி பி எஸ்ஸின் குரல் தான் ராஜ்குமாரின் திரையாளுமைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக கருதினர். அதன் பின்னர் கன்னட சினிமாவின் மிக முக்கியமான பாடகராக பி பி எஸ் ஆனார். அவருடைய திரையிசைப் பயணத்தில் கன்னடத்தில் மட்டும் தான் ஒரு உச்சநட்சத்திரப் பாடகராக பி பி எஸ் அங்கீகரிக்கப்பட்டார். தனது படத்தின் பாடல்களை ராஜ்குமார் சொந்தமாகப் பாடத்தொடங்கிய 1974 ஆம் ஆண்டு வரை இது நீடித்தது. ராஜ்குமாருக்காக மட்டுமே ஏறத்தாழ 200 படங்களில் பாடியிருக்கிறார் பி பி எஸ்.

பி பி எஸ்ஸின் கன்னடப் பாடல்களை நீங்கள் கேட்டிராவிட்டால் ஒரு பாடகராக அவரை நீங்கள் அறிந்து வைத்திருப்பது குறைவானதேயாகும். பெட்டத ஹுலி
படத்தில் 'ஆகாசத லோகதி தூரா’ மற்றும் 'ஆடித்திருவா மோடகளே", மிஸ் லீலாவதி படத்தில் ’தோணி சாகலி', ஸ்வர்ண கௌரி படத்தில் 'பார சந்த்ரமா', விஜயநாகரத வீரபுத்ரா படத்தில் 'அபார கீர்த்தி கெளிஸி', அரிஷின கும்குமா படத்தில் 'கோபுர கண்டு', தூமகேது படத்தில் 'ஆஹா இதேனு நடெ’, சந்த்யா ராகா படத்தில் 'தீன நா பந்திருவே', ஸ்வர்ணகௌரி படத்தில் 'பாரே நீ செலுவே', கனகதாசா படத்தில் 'பாகிலனு தெரெது', புனர்ஜென்மா படத்தில் 'ஒலுமெய ஹுவே' மற்றும் ‘அனுராகதி நீ பாடலேகே, தினா தினா ஒலுமெயு கண்டாக" போன்ற பாடல்கள் பி பி எஸின் சிறந்த கன்னடப் பாடல்களுக்கு சில உதாரணங்கள்.

தமிழில் பி பி எஸ்ஸின் இசைப்பயணம் 1957ம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய அடியை எடுத்து வைத்தது. சமயசஞ்சீவி படத்தில் ஜிக்கியுடன் சேர்ந்து பாடிய ’கம கமவென’, எம்.என்.நம்பியாருக்கு பின்னணியாக மக்களைப் பெற்ற மகராசி படத்தில் ’ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’, மக்தலநாட்டு மேரி படத்தில் ’கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை’ போன்ற பாடல்கள் இவ்வருடத்திலே வெளியாயின. 1959ல் முதன்முதலாக ஜெமினி கணேசனுக்காக பின்னணி பாடினார். அதுவரை ஏ.எம்.ராஜாவே ஜெமினியின் திரையிசைக் குரலாக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற ’இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை பி பி எஸ்ஸுக்கு வழங்கியிருந்தார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

அடுத்த வீட்டுப் பெண் (1960) படத்தில் மூன்று மிக முக்கியமான பாடல்களை ஆதிநாராயண ராவ் இசையில் பாடினார். 'வாடாத புஷ்பமே (வனிதா மணியே)', 'கண்ணாலே பேசிப் பேசி' என்ற இருபாடல்கள் வெகுவாக ரசிக்கப்பட்டது, இப்பட்த்தின் 'மாலையில் மலர் சோலையில்' என்ற பாடல் எக்காலத்துக்குமுரிய எனது விருப்பமான பி பி எஸ் பாடல் ஆகும். பாவமன்னிப்பு (1961) படம் வெளியான பிறகுதான் பி பி எஸ் தமிழில் வெகுவாக பிரபலமடைந்தார். அதில்தான் ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் அமைந்திருந்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை பி பி எஸ்ஸைப் பற்றி குறிப்பிட்டபோது "அப்போது டி.எம்.எஸ்ஸின் குரல் மட்டுமே சிவாஜி, எம்.ஜி.ஆருக்கும், ஏ.எம்.ராஜாவின் குரல் மட்டுமே ஜெமினி கணேசனுக்கும் பொருத்தமாக இருக்கும் என பெரும்பாலோர் நம்பி வந்தனர். நான் அதை மாற்ற விரும்பினேன். பி பி எஸ்ஸை ஜெமினிக்காக பாடவைத்தேன். என்னிடமும், மற்ற இசையமைப்
பாளர்களிடமும் அவர் ஏற்கனவே பாடியிருந்தாலும், முதன்முறையாக ஒரு பெரிய கதாநாயகனுக்காக அவர் பாடியது அப்போதுதான். பின்னர், சிவாஜி மற்றும் எம் ஜி ஆருக்காகவும் பாடியிருக்கிறார். தெலுங்கில் என்.டி.ராமராவுக்காகவும் அவரைப் பாட வைத்தேன். கண்டசாலாவின் குரல் மட்டுமே என்.டி.ஆருக்கு பொருந்தும் என பலர் மறுப்பு தெரிவித்தனர். எனினும் பி பி எஸ்ஸின் குரலிலேயே பாடலை வைத்தேன். ’புஜ்ஜி புஜ்ஜி பாப்பாயி’ என்ற அந்த பாடல் வெளிவந்த உடனே வெகுவாக ரசிக்கப்பட்டு புகழடைந்தது.

"ஸ்வரங்களைப் பற்றி அவருக்கிருக்கிற ஞானமே பி பி எஸ்ஸின் பலம்" என்று எம்.எஸ்.வி குறிப்பிடுகிறார். மேலும் "மெட்டையும் பாடல் வரிகளையும் கேட்ட உடனே அவரால் பாடமுடியும். அவர் கௌரவமான நடத்தை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும் இருந்தார். அவரது தனித்துவமான தொனியும் சிறப்பான குரலும் பாடலுடன் எளிதில் கலந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பி பி எஸ் அவரது வெற்றிகளை இசையமைப்பாளர்களுக்கே உரியதாக்குகிறார். "ஒரு பாடல் பிரபலமடைய வேண்டுமென்றால் அது காட்சியமைப்புகளாலும் ஒளிப்பதிவாலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அல்லாது பாடகர் எவ்வளவு சிறப்பாக பாடி இருந்தாலும், வரிகளும், மெட்டும் எவ்வளவு நன்றாக அமைந்திருந்தாலும் அது பாடலை வெற்றியடையச் செய்யாது" என்றும்
பி பி எஸ் குறிப்பிட்டிருக்கிறார். பி பி எஸின் பாடல்கள் இடம்பெற்ற படங்களில் பெரும்பாலானவற்றை நான் பார்த்த்தில்லை என்பதால் இக்கருத்து உண்மையில்லை என்றே சொல்லுவேன்.

பி பி எஸ்ஸைப்பற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசுகையில், "நான் பி பி எஸ்ஸின் தீவிர பக்தன். அவருடைய பல பாடல்களை மேடையில் பாடும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நான் முதலில் பார்த்த பாடல் பதிவு பி பி எஸ் பாடியதாகும். காதலிக்க நேரமில்லை படத்தின் ’நாளாம் நாளாம்’ எனும் பாடலின் தெலுங்குப் பதிப்பு தான் அது. பாடும் வாய்ப்பு தேடி எம்.எஸ்.வியை சந்தித்த போதும் குரல்தேர்வுக்காக நான் பாடிக்காட்டியது பி பி எஸ் பாடிய ’நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலே. பி பி எஸ் ஒரு சிறந்த கவிஞரும் எழுத்தாளருமாவார். எட்டு மொழிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேலான கவிதைகளையும் பாடல்களையும் எழுதியிருக்கிறார்" என்று உணர்வு பூர்வமாக குறிப்பிடுகிறார்.

உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல்), பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் (வீரத்திருமகன்), மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மற்றும் மயக்கமா கலக்கமா (சுமைதாங்கி), மௌனமே பார்வையால் (கொடிமலர்), இந்த மன்றத்தில் ஓடிவரும் (போலீஸ்காரன் மகள்), பூஜைக்கு வந்த மலரே வா (பாத காணிக்கை), கண்படுமே பிறர் கண்படுமே (காத்திருந்த கண்கள்), பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா), அவள் பறந்து போனாளே (பார் மகளே பார்), அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை) போன்ற பி பி எஸின் அனைத்துப் பாடல்களுமே பல ஆண்டுகளாக நாம் ரசித்து வருபவை.

நம்பிக்கையின்மையின் துயரத்தை வெளிப்படுத்தும் "யார் சிரித்தால் என்ன?, ஏமாற்றத்தை உணர்த்தும் "கண்களே கண்களே" காதலின் மெல்லுணர்வைத் தரும் "மலரோடு விளையாடும்", சோகமும் ஏக்கமும் வெளிப்படுத்தும் "நிலவே என்னிடம் மயங்காதே" மற்றும் "தென்னங்கீற்று ஊஞ்சலிலே", நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட"நேற்றுவரை நீ யாரோ?" பரிதாப உணர்வை வெளிப்படுத்தும் "என்னைப் பார்த்தால் பரிகாசம்", தத்துவப்பாடல்களான "மயக்கமா கலக்கமா", ’வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும்", "ஆற்று வெள்ளம் போன பின்னாலே", காதல் உணர்வின் உச்சமான "ரோஜா மலரே ராஜகுமாரி", காதலின் உற்சாகத்தை அளிக்கும் "போகப் போகத் தெரியும்" மற்றும் "தாமரைக் கன்னங்கள்", குழந்தைப் பாசத்தை வெளிப்படுத்தும் "சின்னச் சின்னக் கண்ணுக்கு", வேட்கையின் சிருங்காரத்தை தரும் "என்னருகே நீயிருந்தால்" மற்றும் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு", கவித்துவமான "காற்றுவெளியிடைக் கண்ணம்மா", ராக பாவங்கள் வெளிப்படுத்தும் "பொன் என்பேன்" மற்றும் "பார்த்தேன் சிரித்தேன்" போன்ற பாடல்களெல்லாம் பி பி எஸ்ஸால் சிறப்பாக பாடப்பட்டவையாகும்.

பொதுவாக எல்லோரைப் பற்றியும் நல்ல கருத்துக்கள் சொல்வதையே விரும்புபவர் பி பி எஸ். ஆனால் ஒருமுறை பாடகி அனுராதா ஸ்ரீராம் ஒரு மேடை நிகழ்ச்சியில் மோசமாகப் பாடிவிட்டு அங்கிருந்த பி பி எஸ்ஸிடம் கருத்தைக் கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டும் எதுவும் சொல்லாமலேயே இருந்து விட்டார். அனுராதா பாடியதை அவர் விமர்சனபூர்வமாக அணுகியிருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். பி பி எஸுக்குள்ளே இருக்கும் இசை விமர்சகர்தான் அப்போது வெளிப்பட்ட்து என்றே நினைக்கிறேன்.

அதைப்போலவே பி பி எஸ்ஸின் பாடல்களையும் விமர்சனபூர்வமாக அவதானித்தால், அவரது பாடல்களில் பெரிய மந்திர ஜாலங்களோ, எல்லையற்ற பரவசமோ, உள்ளம் பேதலித்த உச்ச அனுபவங்களோ வெளிப்பட்டதில்லை எனக்காணலாம். அவருக்கு வழங்கப்பட்ட பாடல்களின் உணர்வுகளை தீவிரமடையாமல் அவர் மீளுருவாக்கிப் பாடினார் என்றும் கருதலாம். உணர்ச்சிகளின் உச்சங்களை அடைவதை விட சங்கதிகளை கச்சிதமாகவும் மென்மையாகவும் பாடுவதில் தேர்ச்சியை வெளிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தினார் பி பி எஸ் என்றும் கூறலாம். இத்தகைய குணாம்சத்தால் அவரது பல பாடல்கள் ஒருவகையான இயந்திரத்தனத்துடன் ஒலித்தது. இதற்க்கு காரணம் பெரும் ஏற்றங்களோ தாழ்வுகளோ இல்லாத சாதாரணமான ஒரு வாழ்வை சிறுவயதிலிருந்தே அனுபவித்து வந்ததனால் கூட இருக்கலாம். ஒரு உன்னதமான கலைஞனிடம் வெளிப்படும் கலை என்பது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவனது வாழ்வின் பிரதிபலிப்பேயாகும். அவனது வாழ்வு சாதாரணமானதாக, சராசரியானதாக இருக்கும் பட்சத்தில் அவனது கலைவெளிப்பாடும் அவ்வாறானதாகவே இருக்கும்.

பந்தபாசம் படத்தில் டி.எம்.எஸ் உடன் இணைந்து பாடிய 'கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு' என்ற பாடலை அவர் பாடும் விதம் அவரது இந்த அமைதியான பாடும்முறைக்கு மிகச்சிறந்த உதாரணம். அதே பாடலில் டி எம் எஸ் வெளிப்படுத்தும் உணர்வுகள் வெளிப்படையானதாக இருக்கும். ஆக்ரோசமான உணர்வுகள் முதல் மனச்சோர்வின் ஆழங்கள் வரை எல்லா வகையான உணர்ச்சிகளையும் டி எம் எஸ் தனது பாடல்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, பி பி எஸ் மென்மையான காதலுணர்வுகளை மறைவாக வெளிப்படுத்தும் பாடல்களை மகிழ்வோடு பாடி கொண்டிருந்தார். அத்தகைய காதல் உணர்வைக்கூட டி எம் எஸ் எவ்வாறு வெளிப்படையாக வெளிப்படுத்தினார் என்பதற்க்கு டி.ஜி.லிங்கப்பா இசையில் வந்த ’சித்திரம் பேசுதடி’ (சபாஷ் மீனா) போன்ற பாடல்கள் சான்று. ’அந்தால ஓ சிலகா’ என்ற பி பி எஸின் தெலுங்கு பாடலையும் அதன் தமிழ் வடிவமான 'அன்புள்ள மான்விழியே' என்ற டி எம் எஸ் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

கச்சிதமாகப் பாடும் உத்திகளில் பி பி எஸ் ராஜ்குமாரை விட பல மடங்கு சிறப்பானவர் ஆயினும் பி பி எஸுக்கு இல்லாத உணர்ச்சிகளின் உயிரோட்டம் ஒன்று ராஜ்குமாரின் பாடும்முறையில் இருந்த்து. வெவ்வேறுபட்ட உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்துவதாக இருந்தன ராஜ்குமாரின் பல பாடல்கள். சந்தேகம் இருந்தால் ராஜ்குமாரின் 'பெளதிங்களாகி பா' (ஹுலிய ஹாலினா மேவு) பாடலையோ அல்லது 'பானிகொந்து எல்லெ எல்லிதே (பிரேமத காணிகெ) பாடலையோ கேட்டுபார்ருங்கள். அதேபோல் ஏ.எம்.ராஜாவை விட மிக ஆழ்ந்த, முழுமையான குரலைக் கொண்டிருந்தவர் பி பி எஸ். ஆயினும் ஏ.எம்.ராஜாவின் பாடும் முறை தான் இயல்பானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்தது. வெகு இயல்பாகப் பாடுபவராக ஏ எம் ராஜா இருந்தார் என்பதை பி பி எஸே ஒத்துக்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பி பி எஸ்ஸின் சிறப்பு என்னவென்றால், அவர் தனக்கு இயல்பாக பாடவராத உணர்ச்சிகளை பாட ஒருபோதும் போலியாக எத்தனித்ததில்லை என்பது தான். அவருக்குப் பின் வந்த, அவரை வழிபடுவதாக்க்கூறும் சில பாடகர்களைப் போல தனது பல்வேறு திறமைகளை நிரூபிக்க வேண்டி மிகையான உணர்ச்சி வெளிப்பாடுகளை தனது பாடலில் அவர் ஒருபோதும் காட்டியதில்லை. பி பி எஸின் பாடல்கள் நம்மை பரவச உணர்வின் உச்சிக்குக் கொண்டு செல்லாமல் போகலாம் என்றாலும் மனித வாழ்வின் அமைதியான, மென்மையான பல பகுதிகளை தொட்டுச்சென்றது அவை.

அத்தகைய மென்னுணர்வுகளைப் பாடுவதில் அவர் மெய்யாகவே சிறந்து விளங்கினார். சிறந்த உதாரணமாக, இந்தியில் புகழ்பெற்ற அவரது ஒரேயொரு பாடலான ’சந்தா ஸே ஹோகா வோ பியாரா’’ எனும் பாடலைச் சொல்லலாம். லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடிய இப்பாடல் மே ஃபி லட்கி ஹூம் (1961) படத்தில் இடம்பெற்றிருந்த்து. இதே பாடலின் தமிழ் வடிவமான ’பூப்போல பூப்போல பிறக்கும்’” (நானும் ஒரு பெண்)’ எனும் டி.எம்.எஸ் பாடிய பாடல் மற்றும் அதன் தெலுங்கு வடிவமான கண்டசாலா பாடிய ‘சின்னாரி பொன்னாரி பூவு (நீடி ஆட ஜென்ம) பாடலையும் கேட்டுப் பார்க்கலாம். பி பி எஸ் பாடிய இந்திப்பாடல் மற்ற இரு பாடல்களையும் விட பல மடங்கு சிறப்பாக இருப்பதை உணரலாம்.

1970 களின் கடைசியில் எம்.எஸ்.வி திரையிசையிலிருந்து வெளியேறியபோதே பி பி எஸ்ஸின் திரையிசை வாழ்வும் முடிந்து போனது. அதன்பின்னர் 1979ம் ஆண்டு சங்கர்-கணேஷ் இசையமைப்பில் இனிக்கும் இளமை எனும் படத்தில் இடம்பெற்ற 'மாலை மயங்கினால் இரவாகும்" என்ற பாடலைப் பாடினார். வழக்கமான பி பி எஸ் பாணியிலிருந்து வேறுபட்டதொரு இனிமையான பாடல். இளையராஜா பி பி எஸுக்கு குறிப்பிடும்படியான எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை. கடவுள் அமைத்த மேடை (1979) படத்தில் 'தென்றலே நீ பேசு' பாடலை இளையராஜா இசையில் பாடினார். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது படங்களில் பி பி எஸ்ஸுக்கு எந்த வாய்ப்பும் வழங்கியதில்லை. 2004ல் யுவன் சங்கர் ராஜா இசையில் 7ஜி ரெயின்போ காலனி பட்த்தில் ஓரிரு வரிகளைப் பாடினார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் சிலவரிகளைப் பாடினார். இவ்விரண்டுக்குமே அப்படங்களின் இயக்குனரான செல்வராகவன் தான் காரணமாக இருக்கலாம்.

பாடும் வாய்ப்புக்கள் குறைந்துபோன பின் தன்னை ஒரு பல்மொழிக்கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் தான் பி பி எஸ் முன்வைத்து வருகிராற். ஆனால் அதிலும் சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைத்த்தாக தெரியவில்லை.
இளையராஜாவின் நண்டு (1981) படத்திலும் தடாகம் என்ற மலையாளப்பட்த்திலும் சில இந்திப் பாடல்களை எழுதினார். மற்றபடி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற 8 மொழிகளில் அவர் எழுதியதாக்க் கூறப்படும் 2 லட்சத்துக்கும் மேலான பாடல்களோ கவிதைகளோ எங்கே பயன்பட்ட்து என்றும் தெரியவில்லை. தனக்காக மட்டுமே அவர் விடாமல் எழுதுகிறார் என்றே படுகிறது.

அவருடைய கன்னடமொழிக்கான கலைச்சேவையைப் பாராட்டி சமீபத்தில் கர்னாடக அரசு அவருக்கு பெங்களூரின் முக்கியமான பகுதியில் 2500 சதுர அடி நிலத்தைப் பரிசளித்தது. பி பி எஸ்ஸின் ஆயுட்காலத்திலேயே அவருக்கு கிடைத்த தலைசிறந்த அங்கீகாரம் இதுவாகத் தான் இருக்கக் கூடும். இதை வழங்கும்போது "இது மிக மிக தாமதமாக வழங்கப்படுகிறது, எனினும் ஒருபோதும் வழங்கப்படாமலே இருப்பதற்கு தாமதாயினும் சிறந்தது" என்று கர்நாடக முதலமைச்சர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசோ அவருக்கு எவ்வித மதிப்புமற்ற கலைமாமணி விருதையும், ஒரு முறை இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியையும் வழங்கியது!

இதைத்தவிர பி பி எஸுக்கு அவரது தகுதிக்கோ சாதனைகளுக்கோ ஏற்ற எந்தவொரு விருதுமே கிடைத்ததில்லை. மாநில அரசுகளோ மத்திய அரசோ எந்த விருதையும் அவருக்கு வழங்கியதில்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றவை போகட்டும் ஒரு பிலிம்ஃபேர் விருதுக்கோ சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கோ கூட அவர் பரிந்துரைக்கப்பட்ட்தாக தெரியவில்லை! பல்வேறு பல்கலைக் கழங்கள் இசைத்துறையின் பல்வேறு சில்லுண்டிகளுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துக் கொண்டிருந்தும் யாருமே பி பி எஸ்ஸை பொருட்படுத்துவதில்லை.

இப்போதும் சென்னையில் நிகழும் பல மேடை இசை நிகழ்ச்சிகளில் பி பி எஸ் அமர்ந்திருப்பதைக் காணலாம். எவ்வித அழைப்பும் இல்லாமல், சாதாரண பார்வையாளனாக நிகழ்ச்சிகுச் சென்று கலைஞர்களைப் பாராட்டி விடைபெறுவார். அங்கேயும் பெரும்பாலும் அவர் அவமதிக்கப்ப்டுகிறார் என்றே படுகிறது. தமிழ் திரை இசையில் மட்டுமே இதுவரைக்கும் 1300க்கும் மேற்பட்ட பாடகர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்று அறியும்போதாவதுகூட பி பி ஸ்ரீநிவாஸ் யார் என்பது இவற்களுக்கு விளங்குமா என்று தெரியவில்லை.

போன செப்டம்பரில் என்னுடைய இரண்டாவது தமிழ் நூலான ’இசையின் தனிமை’ புத்தக அறிமுக விழா சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் நிகழ்ந்தது. நிகழ்வு முடிந்து வெளிவருகையில் பி பி எஸ் தனியாக முதுமையின் தடுமாற்றத்துடன் நடந்து அரங்கிற்குள் செல்வதைப் பார்த்தேன். நேரம் இரவு 10.30 இருக்கும். அங்கே ஏதோ தெலுங்கு சினிமா ஒன்று இரவுக்காட்சியாக துவங்க இருந்தது. இந்த முதிய வயதில் இவரால் எப்படி இரவுக்காட்சிகளை அமர்ந்து பார்க்க முடிகிறது? ஒருவேளை இரவுகளில் தூக்கமில்லாமல் இருப்பதால் இருக்குமோ அல்லது போக விருப்பமான வேறு இடங்கள் ஏதும் இல்லாததால் இருக்குமோ என்றெல்லாம் தீவிரமாக யோசித்து சங்கடமடைந்தேன். சாலைக்கு எதிரே அமைந்திருந்த புதிய செம்மொழிப் பூங்காவின்மேல் இருள் மட்டும் நிலவியது. அங்குதான் முன்பு
பி பி எஸ் விரும்பிச்செல்லும் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் இருந்தது.
தமிழில் முபாரக்