20190113

ரித்விக் கட்டக்கின் காதலி



”திதாஷ்... கல்கத்தாவில் தானே இருக்கிறாய். அடிக்கடி சென்று ஷுரமாதி*யைப் பார்த்துக்கொள். தேவையான உதவிகளைச் செய். 93 வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது வீட்டுத் தொலைபேசியை யாருமே எடுப்பதில்லை. போனவாரம்கூட அழைத்திருந்தேன்” என்று அலைபேசியில் சொன்னேன். “ஐயோ சார்… உங்களுக்குத் தெரியாதா? ஷுரமாதி இறந்துபோய் இரண்டு மாதம் ஆகிறதே” என்றாள் திதாஷ். தலையில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது எனக்கு. அவள் சொன்னது ரித்விக் கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்கின் மரணம் குறித்து. பலநாட்களாக உடல்நலமற்று இருந்தார். வயதும் அதிகமாகியிருந்தது. ஆனால் ஒரு மகனைப்போல் என்னை நேசித்த ஷுரமாதியை இறுதியாக ஒருமுறை சென்று பார்க்க முடியவில்லையே!

ஷுரமாதி இறந்த செய்தியை காலதாமதமாக எனக்கு வழங்கிய திதாஷ் 23 வயது மட்டுமேயான இளம்பெண். ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளை வழியாக எனக்கு அறிமுகமானவள். அவளது வித்தியாசமான பெயர் ரித்விக் கட்டக்கின் திரைப்படமான ‘திதாஷ் எக்தி நதிர் நாம்’ என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. திதாஷின் தாய் ரித்விக் கட்டக்கின் தீவிர ரசிகை. மகளுக்கு திதாஷ் என்றும் மகனுக்கு ரித்விக் என்றும் பெயர் வைத்து ரித்விக் கட்டக்கின் மீதான தனது காதலை வெளிப்படுத்தியவர். வெறிகொண்ட இத்தகைய எத்தனையோ ரசிகர்களை தனக்கென்று உருவாக்கியிருக்கிறார் ரித்விக் கட்டக். பதினான்காவது வயதில் ரித்விக் கட்டக்கின் சுவர்ண ரேகா படத்தைப் பார்த்த நாள்முதல் நான் அவரது தீவிர ரசிகன். பல பதிற்றாண்டுகள் கடந்தபோது கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்குடனும் அவரது மகள் சம்ஹிதா கட்டக்குடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சத்யஜித் ரே, பிரபல பெங்காலிக் கவிஞரும் விமர்சகருமான சங்கா கோஷ் போன்றவர்களுடன் சேர்ந்து ஷுரமா கட்டக் உருவாக்கிய ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பொறுப்பாளராக நான் வரவேண்டுமென்று ஷுரமாதி என்னிடம் சொன்னார். அதற்கு நான் தகுதியானவன் அல்லன் என்று சொன்னபோதிலும் ஷுரமாதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ரித்விக் கட்டக்கின் தொண்ணூறாவது பிறந்தநாளான 2015 நவம்பர் 4 அன்றைக்கு கல்கத்தாவின் சத்யஜித் ரே அரங்கில் நடந்த விழாவில் ‘ரித்விக் கட்டக், இந்திய மாற்றுச் சினிமாவின் வானுயரம்’ எனும் தலைப்பில் ஓர் உரையை நிகழ்த்தினேன். சென்னையில் ரித்விக் கட்டக் திரைப்பட விழா ஒன்றை நடத்தி அதில் கட்டக் அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பாளரும் கட்டக்கின் மூத்த மகளுமான சம்ஹிதா கட்டக்கைப் பங்கேற்க வைக்கலாம் என்று தமிழ் ஸ்டுடியோ அருணிடம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் சம்ஹிதா கட்டக் அகாலத்தில் இறந்துபோனார். இப்போது ஷுரமாதியும் இறந்துவிட்டார். இனிமேல் கட்டக்கின் பெயரால் நாம் எதைச் செய்தாலும் அதை நினைத்து சந்தோஷப்பட ஷுரமாதி இல்லையே…

துணிவு, எளிமை, கருணை போன்ற குணங்களால் நிரம்பியிருந்தவர் ஷுரமாதி. ரித்விக் கட்டக் எனும் மாமேதையுடன் தான் வாழ்ந்த காலங்களைப் பற்றி விரிவாக அவர் என்னிடம் பேசியிருக்கிறார். சொல்லப்போனால் ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்டாகயிருந்த ரித்விக் கட்டக்கை விடவும் பெரிய அரசியல் போராளி ஷுரமா கட்டக். 1940களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அஸ்திவாரமிடுவதற்காக அரும்பாடுபட்டவர். அதற்காகச் சிறைக்குச் சென்றவர். ஆச்சரியமான முறையில் ஒரே நாளில் பிறந்தவர்கள் கட்டக்கும் ஷுரமாதியும். 1925 நவம்பர் 4 அன்று. வங்கப் பிரிவினையின் இருண்ட நாட்களை, அவை உருவாக்கிய லட்சக்கணக்கான மரணங்களை, வன்முறையை, பசியை, உணவுப் பஞ்சத்தைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவர்கள் இருவருமே. ரித்விக் கட்டக்கின் ஆன்மாவில் என்றுமே நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது வங்கப் பிரிவினை உருவாக்கிய ஆற்றொணாத் துயரம். அது தன்னையே துடைத்தழிக்குமளவில் ஒரு வாதையாக அவரைப் பின்தொடர்ந்து தாக்கியது. தனது வாழ்வின் பெரும்பகுதியை அதே மனநிலையில் வாழநேர்ந்த கட்டக்கைப் பத்திரமாகப் பாதுகாத்து, கலையும் திரைப்படமும் சார்ந்து அவருக்கிருந்த பேராவல்களை நனவாக்கும் வகையில் போராட முயன்றார் ஷுரமாதி. ஆனால் அது அவருக்கு கொடும் துயரங்களை அளித்தது.

1971 ஜூலையில் ஷுரமாதிக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலப் பொறுப்பாளராகயிருந்த, மதிப்பிற்குரிய தலைவர் பி சி ஜோஷி எழுதிய கடிதம் அது. “நேற்று நான் ரித்விக்கை அவன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பார்த்தேன். அவனது நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 45 வயது மட்டுமே இருக்கும் அவன் ஒடுங்கிப்போன ஒரு கிழவனைப்போல் காணப்படுகிறான். உடல்நலம் மிகவும் மோசமாக இருக்கிறது. நாள்முழுவதும் குடிபோதையிலேயே இருக்கிறான். மதுப்பழக்கத்தை விட்டுவிலக அவனுக்குப் பல அறிவுரைகளை சொன்னேன். ஆனால் எதுவுமே அவன் காதில் விழவில்லை. இவ்வுலகில் அவனுக்கென்று இருப்பது நீ மட்டும்தானே! இப்படி விலகி நிற்காமல் கல்கத்தாவிற்குத் திரும்பிவந்து எதாவது வழியில் அவனைத் தேற்ற நீ முயற்சி செய்யக் கூடாதா?”.

அக்காலத்தில் ஷுரமாதி கட்டக்கை விட்டுவிலகி கல்கத்தாவிலிருந்து 150 மைல் தொலவிலுள்ள சைந்தியா எனும் ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். 5, 7, 9 வயதான மூன்று குழந்தைகளும் அவருடன் இருந்தனர். கட்டக்கும் ஷுரமாதியும் என்றைக்குமாகப் பிரிந்து விட்டனர் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் ஓரளவிற்குப் போதுமான எதாவது ஒரு வேலை கல்கத்தாவில் கிடைத்தால் அங்கேயே திரும்பிப் போகலாம் என்றே ஷுரமாதி யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அங்கு வேலை எதுவும் கிடைக்காததால் சைந்தியாவிலேயே தொடர நேர்ந்தார். அப்போது ரித்விக் கட்டக் கிட்டத்தட்ட ஓர் அகதியைப்போல் கல்கத்தாத் தெருக்களில் அலைந்துகொண்டிருந்தார்.

இன்றைய பெங்க்ளாதேஷ் நாட்டின் தலைநகரமான தாக்காவுக்கு அருகேயுள்ள ராஜ்ஷாஹி எனும் ஊரில் ஒரு பணக்கார நிலக்கிழார் குடுமபத்தில் பிறந்தவர் ரித்விக் குமார் கட்டக். ஒரு பெண்குழந்தையுடன் இரட்டைக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் அவர். ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டி. ஏழாம் மாதத்திலேயே பிறந்தமையால் குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அது உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்றே அனைவரும் எண்ணினர். தனது நிரந்தரப் பிரார்த்தனைகள் ரித்விக்கை உயிர்தப்ப வைத்தது என்று அவரது தாய் நம்பினார். மாவட்ட நீதிபதியாகயிருந்த அவரது அப்பா தான் பெரும் பணத்தைச் செலவுசெய்து வைத்தியம் பார்த்தமையால் குழந்தை உயிர் பிழைத்தது என்று சொன்னார். ஆனால் வளர வளர ரித்விக் தனது அப்பாவின் ஜமீன்தார் மனோபாவத்தையும் அவரது குடிப்பழக்கத்தையும் வெறுக்கத் தொடங்கினார். தனது வாழ்நாளில் ஒருபோதும் மதுவைத் தொடப்போவதில்லை என்று பால்யத்திலேயே அவர் உறுதிபூண்டார்.

இளமைக்காலத்தில் கண்கூடாகப் பார்க்கநேர்ந்த அரசியல் சந்தடிகள் அவரைப் பெருங்குழப்பத்திற்கு ஆளாக்கின. ஒரு மனிதனாகத் தனது இருத்தல், தனது தேசியம், அரசின் அதிகார அடக்குமுறைகள் போன்றவற்றைப் பற்றி உள்ளே எழுந்த பெரும் கேள்விகள் அவரை நிம்மதியிழக்கச் செய்தன. எனது இந்தியா என்பதிலிருந்து எனது பெங்க்ளாதேஷ்** என்று தனது தேசிய அடையாளம் மாறிப்போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. அப்பிரிவு கொண்டுவந்த அடக்குமுறைகளையும் குடும்பப் பிரிவினைகளையும் அவரால் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. வேர் பிடுங்கப்பட்டுச் செத்துக்கொண்டிருக்கும் ஒரு மரத்தைப்போலவே தன்னை உணர்ந்தார். தங்களது உடைமைகள் அனைத்தையும் அங்கேயே கைவிட்டு அவரது குடும்பத்தினர் அகதிகளாகக் கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தனர். கல்கத்தாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. எங்கே பாரத்தாலும் பசியால் மெலிந்து ஒடுங்கிப்போன மனிதர்கள். தாய்மார்களின் அழுகிநாறும் சடலங்களுக்கு அருகே படுத்துக்கொண்டு கதறி அழும் பிஞ்சிளம் குழந்தைகள். கட்டக்கை நிலைகொள்ளாமல் தவிக்கவிட்ட அக்காட்சிகள்தாம் பின்னர் அவரது திரைப்படங்களின் நிரந்தரப் பிம்பங்களாக உருமாறின.

மேகாலயா மாநிலத்தின் தலைநகரமாகப் பிற்காலத்தில் மாறிய ஷில்லோங் நகரில்தான் பிறந்தார் ஷுரமாதி. வசதியான பெங்காலிக் குடும்பம். பன்னிரெண்டாம் வயதில், அவர் வயதுக்கு வந்த அதே நாளில் அவரது தாய் இறந்துபோனார். ஒரு வங்கியை நடத்துமளவிற்குச் செல்வந்தராக இருந்த அவரது தந்தை ஷில்லோங் இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். ஓர் ஆண்குழந்தையை வளர்ப்பதுபோலவே எல்லாச் சுதந்திரங்களுடனும் ஷுரமாதியை வளர்த்தார். சுதந்திரமான எண்ணங்களும் புத்தக வாசிப்பும் சமூக அக்கறையும் ஷுரமாதியை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணித் தலைவியாக ஆக்கின. இளவயதில் பேரழகியாக இருந்த ஷுரமாதி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனுடன் காதலில் விழுந்தார்.

1949ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது தலைவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். தலைமறைவாக மறுத்த ஷுரமாதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது அரசு. இளமை துடிக்கும் வயதில் கொடுங் குற்றவாளிகளும் விலைமாதர்களும் சூழ இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். விடுதலையான உடன் அவரது தந்தை அவரைக் கல்கத்தாவிற்கு அனுப்ப விரும்பினார். வேற்று மதத்தினருடனான ஷுரமாதியின் காதலைப்பற்றிப் பரவிய மதவெறிச் சாயல்கொண்ட பேச்சுகள் அவரை அஞ்சச்செய்திருந்தன. ஆனால் ஷுரமாதி அதையெல்லாம் அஞ்சவில்லை. ’சிறையில் இருந்தபோது பாலியல் ரீதியாக உனக்கு என்னென்ன நடந்தது?’ என்று கேள்விகேட்ட கேடுகெட்ட அந்தக் காதலனுடனான உறவை முறிக்கவே அவர் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.

ரித்விக் கட்டக் தனது ஆங்கிலப் பட்டப்படிப்பை முடித்து இந்திய மக்கள் நாடக அமைப்பில் (இப்டா) இணைந்து நாடகங்களையும் பாடல்களையும் எழுதிவந்தார். விரைவில் மாற்றுத் திரைப்படங்களின்பால் ஈர்க்கப்பட்டு திரைக்கலையைக் கற்றுக்கொண்டார். 1950ல் நெமய் கோஷ் இயக்கிய ’ச்சின்னமூல்’ எனும் படத்தில் துணை இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றினார். பின்னர் தனது முதல் படமான நாகரிக் ஐ எடுத்து முடித்தார். அக்காலத்தில் ஷுரமாதி கல்கத்தாவில் தனது அத்தையின் வீட்டில் தங்கிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இப்டாவுடன் இணைந்து இயங்கத் தொடங்கினார். கட்டக்கும் ஷுரமாதியும் இப்டாவில்தான் முதலில் சந்தித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர். அடிக்கடிச் சந்திக்கத் தொடங்கினர். கல்லூரிச் சாலையிலுள்ள உணவுவிடுதிகளில் அமர்ந்து மீன் கபிராஜியும் காப்பியும் சாப்பிட்டுக்கொண்டு பலமணிநேரம் அரசியல், கலை, இலக்கியம், தத்துவம், சினிமா எனப் பேசிக்கொண்டனர்.

அக்காலக் கல்கத்தாவில் அறிவுஜீவிகளாகத் திகழ்ந்த பல முக்கிய நபர்களின் நட்பு இருவருக்கும் கிடைத்தது. அவர்களில் முக்கியமானவர் இசை மாமேதை சலில் சௌதரி. சலில் அப்போது பம்பாயில் ஹிந்தித் திரைப்படங்களின் இசையமைப்பாளராக பணிபுரிந்துகொண்டிருந்தார். 1955 மே மாதம் 8ஆம் தேதி கட்டக்கும் ஷுரமாதியும் திருமணம் செய்துகொண்டனர். மகிழ்வான ஓர் எதிர்காலத்தை ஷுரமாதி கனவுகண்டார். விரைவில் ஹிந்தித் திரைப்பட உலகிற்கு வருமாறு சலில் சௌதரியிடமிருந்து கட்டக்கிற்கு அழைப்பு வந்தது. கணவனும் மனைவியும் பம்பாய் பறந்தனர்.

பம்பாயின் புகழ்பெற்ற ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவில் கதை, திரைக்கதை எழுத்தாளராக கட்டக் சேர்ந்தார். ஆனால் அந்த வேலையும் அதன் வணிகச் சூழலும் அவருக்குப் பிடிக்கவில்லை. கேளிக்கைத் திரைப்படம் என்கின்ற சொல்லாடலையே கட்டக் வெறுத்தார். சமூக யதார்த்தங்களைப் பிரதிபலித்து சமூக மாற்றத்திற்கு உதவும் மாற்றுத் திரைப்படம்தான் தனது ஊடகம் என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவுக்குள்ளேயே பரீட்சார்த்த சினிமாப் பிரிவு ஒன்றை அமைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற முகர்ஜி குடும்பத்தின் தலைவரும் தயாரிப்பாளருமாகயிருந்த சஷாதர் முகர்ஜிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் கட்டக் இப்படி எழுதினார். “உங்கள் கேளிக்கைச் சினிமாக்காரர்களுக்கு முன்னால் எல்லாவகையான தடைகளையும் வைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த பணம், பழைய தொழில்நுட்பம், நட்சத்திர நடிகர்கள் இல்லை, பெரும் இசையமைப்பாளர்களோ தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லை, பிரம்மாண்ட படப்பிடிப்புத் தளங்கள் இல்லை.. அப்படியொரு சூழலில் நின்றுகொண்டு அவர்கள் எடுக்கும் படங்களைப் பாருங்கள். அவைதாம் அவர்களது உண்மையான கலைத் திறனையும் கலைத் தரத்தையும் வெளிப்படுத்தும்”.

பிமல் ராய் இயக்கிய மதுமதி, ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய முசாஃபிர் போன்ற வணிக வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பின்னர் ஹிந்தித் திரைத்துறையில் கட்டக்கிற்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் பம்பாயின் வணிகச் சினிமா வழங்கிய அந்த பொருளாதார மயக்கத்தில் தொடர அவர் விரும்பவில்லை. கல்கத்தாவுக்கே திரும்பினார். கல்கத்தாவில் சத்யஜித் ரே, ம்ருணால் சென், உத்பல் தத் போன்றவர்களை அடிக்கடிச் சந்தித்தார். அவர்களது ஒற்றுமையுள்ள அரசியல் சிந்தனை, சமூகத்தின்மேலும் மனிதத்தின்மேலுமுள்ள ஆழ்ந்த அக்கறை போன்றவற்றை அச்சந்திப்புகள் வலுவாக்கின. 1952லேயே தான் எடுத்து முடித்த நாகரிக் திரைப்படம் வெளியிடமுடியாமல் தவித்துகொண்டிருந்தபோதிலும் 1958ஆம் ஆண்டில் அஜாந்த்ரிக், பாரி தேக்கே பாலியே எனும் இரண்டு படங்களை எடுத்து வெளியிட்டார். அப்படங்களுமே பரவலாக வெளியிடப்படவோ பேசப்படவோ இல்லை. கலைசார்ந்த தனது கனவுகள் நனவாகாமல் போவதை நினைத்து மிகவும் வருத்தமடைந்தார் கட்டக். தனது கவலைகளுக்கு மருந்தாக அவர் மதுவை நாடத் தொடங்கினார்.

1955ல் வெளியான பதேர் பாஞ்சாலி வழியாக பெரும்புகழடைந்திருந்த சத்ய்ஜித் ரேயும் கட்டக்கும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் படைப்புருவாக்கம் சார்ந்து ஒருவருக்கு அடுத்தவர்மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அந்த விமர்சன வாக்குவாதங்களுக்கு மௌன சாட்சியாக இருப்பார் ம்ருணால் சென். கட்டக் – ரே வாக்குவாதங்கள் பலமுறை எல்லைமீறி, குடிபோதையில் ரேயை உடல்ரீதியாகத் தாக்குமளவிற்குச் சென்றிருக்கிறார் கட்டக். ரே விலகிக்கொள்வார். 1960ல் கட்டக் எடுத்த மேகே டாக்கா தாரா வெளியாகிக் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அது கட்டக் – ஷுரமா தம்பதியினரை மிகவும் மகிழ்வித்தது.

தொடர்ந்து எடுத்த கோமள் காந்தார் பெரும் தோல்வியைத் தழுவியது. கலைரீதியாகவும் அது புரிந்துகொள்ளப்படவில்லை. ரித்விக் மனமுடைந்துபோனார். ஷுரமாதி அப்போது ஜாதவ்பூர் பல்கலையில் முதுகலை பயின்றுகொண்டிருந்தார். கட்டக்கின் மனச் சோர்வுகள் ஷுரமாதியைப் படிப்பை விட்டு விலகும்படிச் செய்தன. மீட்கமுடியாத அளவில் கட்டக் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை அக்காலத்தில்தான் ஷுரமாதி அறிந்துகொண்டார். ஒரு மாமேதைதான் தனது கணவர் என்பதையும் அவருக்குத் தன்னுடைய உதவி தேவை என்பதையும் ஒருபோதும் மறுக்கவில்லை என்றாலும் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்களும் அன்றாடம் அரங்கேறும் குடும்பப் பூசல்களும் ஷுரமாதியை நிலைகுலையச் செய்தன.

சமாளிக்க முடியாத சூழ்நிலையில் தாற்காலிகமாகக் கட்டக்கை விட்டு விலகி கல்கத்தாவிலேயே தனியாக வாழ ஆரம்பித்தார் ஷுரமாதி. அப்படிச் செய்வதனால் கட்டக் மனம் திருந்துவார் என நம்பினார். தனக்கு ஒரு வேலை கிடைத்தால் பணப் பிரச்சினைகள் ஓய்ந்துவிடும், குடும்பத்தின் எல்லாச் செலவுகளையும் தன்னால் சமாளிக்க முடிந்தால் கட்டக் தனது படைப்புகளைச் சார்ந்து மட்டும் இயங்க முடியும். அத்துடன் சிக்கல்கள் இல்லாமலாகும் என்று ஷுரமாதி எண்ணினார். விரைவில் அவருக்கு வேலை கிடைத்து விட்டது. வேலையில் சேரப்போகிறேன், சம்பளம் வரத்தொடங்கியதும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கட்டக்கிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு கட்டக் சொன்ன பதில் ஷுரமாதியின் இதயத்தைச் சுக்குநூறாக்கியது.

”மீரா ஜென்னா என்ற பெண்ணுடன் நான் காதலில் இருக்கிறேன். ஒன்றாக வாழ முடிவெடுத்துவிட்டோம். இதைப்பற்றி உனது கருத்து என்ன? உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மூவரும் ஒன்றாக வாழ்வோமே” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான ஷில்லோங்கிற்கே திரும்பினார் ஷுரமாதி. அந்த அதிரடியைக் கட்டக் எதிர்பார்க்கவில்லை. பல விஷயங்களில் தாராள மனப்பான்மைகொண்டவரான ஷுரமாதி இதையும் ஏற்றுக்கொள்வார் என்றே கட்டக் எண்ணியிருந்தார். எல்லாமே கைவிட்டுப் போயின என்று உணர்ந்த கட்டக் ஏற்கனவே திருமணமாகியிருந்த மீரா ஜென்னாவுடனான உறவை விட்டு விலகினார்.

இக்காலத்தில் குடிப்பழக்கத்தை விடுவதற்கான தீவிர சிகிச்சையை எடுத்துக்கொண்டார். உடல்நலம் தேறியது. மன அழுத்தங்களும் குறைந்து விட்டன. கட்டக் படங்களின் ரசிகையாக இருந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையால் பூனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக கட்டக் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கினார். இயக்கம், நடிப்பு ஆகிய பிரிவுகளின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்தார். கருத்தியல் கோட்பாடுகளைக் குறைத்து செய்முறைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். மணி கௌள், குமார் சாஹ்னி, ஜான் அபிரஹாம் போன்ற பல முக்கியச் சீடர்களின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் பாத்திரமானார். ஆனால் விரைவில் அவ்வேலையிலுமே அவர் சலித்துப் போனார். எண்ணற்ற அலுவலகக் காகிதங்களைச் சரிபார்க்கும் ஓர் அரசாங்க ஊழியராக இருப்பதை அவர் விரும்பவில்லை.

திடீரென்று ஒருநாள் கட்டக் ஷில்லோங்கில் ஷுரமாதியிடம் வந்தார். தன்னையும் குழந்தைகளையும் பூனேவுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்தார் என்றே ஷுரமாதி எண்ணினார். ஆனால் அந்த வேலையை என்றைக்குமாக விட்டுவிட்டதாக அறிவித்தார் கட்டக். சில நாட்கள் ஷில்லோங்கிலேயே தங்கினார். பெரும்பாலும் மௌனமாகயிருந்தார். பின்னர் உட்புறமாகத் தாழிடப்பட்ட அறைக்குள் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு வெளியே வராமல் கழித்தார். அவ்வறையில் இரவும் பகலும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. உரத்த குரலில் கதாபாத்திரங்களைப்போல் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். சிலநேரம் அலறினார். ஷுரமாதி வேலையிலிருந்து திரும்பி வரும்போது குடிபோதையில் மயக்கமாகிக் கிடக்கும் கட்டக்கைத்தான் பலநாள் பார்த்தார். குடியை விடுவதற்கான சிகிச்சைகளை மறுபடியும் எடுத்துக்கொண்டார். ஓரளவிற்குக் குணமான பின்னர் இருவரும் கல்கத்தா திரும்பினார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் தன்னைத்தானே அகற்றிக்கொண்டு எழுத்திற்கு இறங்கினார் கட்டக். திரைப்படக்கலையின் அனைத்து அம்சங்களையும் தொட்டுச் செல்லும் ஏராளமான கட்டுரைகளை அந்நாட்களில் எழுதினார். பல கதைகளையும் எழுதினார். எடுக்கப்போகும் படங்களுக்கான திட்டங்களை ஷுரமாதியிடம் பகிர்ந்தார். சில திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தார். ஆனால் அத்திரைக்கதைகள் முடியும் தருவாயில் அவரது மனப்பிறழ்வுகள் மீண்டும் தலைநீட்டத் தொடங்கின. அது கட்டுப்படுத்த முடியாமலானபோது கட்டக்கை மனநலக் காப்பகத்தில் சேர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஷுரமாதி தள்ளப்பட்டார்.

ஷுரமாதியிடம் அன்றாடச் செலவுகளுக்கான பணம்கூட அப்போது இருக்கவில்லை. எங்கேயாவது ஒரு வேலை கிடைக்குமா என்று அவர் அலைந்துகொண்டிருந்தார். எதுவுமே அமையவில்லை. இறுதியில் கட்டக் படங்களின் ஒளிப்பதிவாளரான மகேந்திர குமார்தான் அவருக்கு உதவினார். சிகிச்சை பலனளிக்கவில்லை. இறுதியில் மூளையில் மின்சாரம் பாய்ச்சும் அதிர்வுச் சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதை அனுமதிப்பதைத் தவிர ஷுரமாதியிடமும் வேறுவழி இருக்கவில்லை. அச்சிகிச்சை மேலும் பல சிக்கல்களைத்தாம் வரவழைத்தன. பலசமயம் தான் யாரென்றே கட்டக்கிற்குத் தெரியாமலாகியது.

ரத்தத்தில் குளித்த பெண்களும் குழந்தைகளும் தன் கண்முன்னால் அங்குமிங்கும் ஓடுகிறார்கள் என்று ஷுரமாதியிடம் சொன்னார் கட்டக். அவர்களை ’பெங்க்ளாதேஷின் ஆவிகள்’ என்று குறிப்பிட்டார். தினமும் எண்ணற்ற மருந்து ஊசிகளை அவரது உடம்பில் செலுத்தினார்கள். ஒவ்வொரு ஊசிக்குப்பின்னும் மயக்கமானார். தன்னால் எதையுமே சரியாகச் சிந்திக்கவோ நினைவுகூறவோ முடியவில்லை என்று சொல்லித் தன்னை வீட்டுக்குக் கொண்டுபோகுமாறு ஷுரமாதியிடம் கெஞ்சினார். ஆனால் அவர் முழுக் குணமடையும்வரை மனநலக் காப்பகத்தில் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். கட்டக்கை காப்பகத்தில் விட்டுவிட்டு ஷுரமாதி மீண்டும் ஷில்லோங் கிளம்பினார்.

இதற்கிடையே இந்திய மாற்றுச் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனை மனநலக் காப்பகம் மனிதாபிமானமற்று நடத்துவதாக செய்தி பரவியது. திரைப்படத் துறையினரும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் கட்டக்கிற்காகக் குரல் கொடுத்தனர். இறுதியில் மாநில அரசின் ஆணையின்படி கட்டக் விடுதலையாகி வீடு திரும்பினார். முற்றிலும் குணமடைந்து மனம் திருந்திய கட்டக்கைப் பார்க்கக் கல்கத்தாவிற்கு வந்த ஷுரமாதியின் முன்னால் கடும் சினத்துடன் நின்றார் கட்டக். ”திரைப்படம் சார்ந்து பெருங்கனவுகளைக் கொண்டிருக்கும் என்னை நீ ஒருபோதும் மதிக்கவோ எனக்கு துணையாக நிற்கவோ இல்லை” என்று அவர் ஷுரமாதியைக் குற்றம் சாட்டினார். ஷுரமாதியாலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தச் சச்சரவுகள் ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டே போயின.

ஒருநாள் ஷுரமாதி வீட்டுக்கு வரும்போது உச்சபட்சக் குடிபோதையில் கட்டக் தரையில் படுத்திருந்தார். அவருடன் காளிகட்டம் மயானத்தில் பிணங்களை எரிக்கும் வேலை செய்யும் சிலரும் அமர்ந்திருந்தார்கள். தனது இறுதிச் சடங்குகளை எப்படி நடத்தவேண்டும், தனது பிணத்தை வித்தியாசமான முறையில் எப்படி எரிக்கவேண்டும் என்றெல்லாம் கட்டக் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இந்த விபரீத நடத்தைக்கு விளக்கம் கேட்ட ஷுரமாதியிடம் தான் செய்துகொண்டிருப்பது கலைரீதியான சில பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னார். வருத்தமும் கோபமும் உந்திவிட்ட ஷுரமாதி குழந்தைகளை இழுத்துக்கொண்டு சைந்தியா ஊருக்குக் கிளம்பினார்.  

சதாநேரமும் குடிபோதையில் அலைந்துகொண்டிருந்த கட்டக்கிற்கு பிரபல ஹிந்தி, பெங்காலி நாயக நடிகரும் பெங்காலிப் பாடகருமான பிஸ்வஜித் ஆதரவளித்தார். தனது வீட்டிலேயே அவர் கட்டக்கைத் தங்கவைத்தார். அத்துடன் கட்டக்கிற்கு ஆலோசனைகளையும் வழங்கினார். சில மாதங்கள் கழித்து ஷுரமாதியையும் குழந்தைகளையும் பார்க்க கட்டக் சைந்தியாவுக்கு வந்தபோது அவரது தோற்றமே மாறியிருந்தது. ஆரோக்கியமாகக் காட்சியளித்தார். சிலநாட்கள் அங்கேயே தங்கி முன்பு எழுதிப் பாதியில் விட்டுவிட்ட திதாஷ் எக்தி நதிர் நாம், ஜுக்தி தக்கொ ஆர் கப்போ எனும் படங்களின் திரைக்கதைகளை எழுதி முடித்தார். பின்னர் பிஸ்வஜித் போன்ற அபிமானிகளின் உதவியினால் பெங்க்ளாதேஷ் சென்று திதாஷ் படத்தை எடுத்தார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் கட்டக் ரத்தம் கக்கி மயக்கம்போட்டு விழுந்தார்.

அவருக்குக் கடுமையான காசநோய் முற்றிப் போயிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். தனது மேகே டாக்கா தாராவின் கதாநாயகியைப் பீடித்து ஒடுக்கிய அதே கொடும் நோய் அறம் பாடப்பட்டதுபோல் கட்டக்கின்மேல் விழுந்திருந்தது. அப்போது கல்கத்தாவிற்கு வந்திருந்த பிரதமர் இந்திராகாந்தி தனது தனிப்பட்ட ஹெலிகாப்டரை உடனடியாக தாக்காவிற்கு அனுப்பி கட்டக்கை அங்கிருந்து கல்கத்தாவிற்குக் கொண்டுவந்து மருத்துவக் கல்லூரியின் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார். பிரபல பெங்காலி நடிகர் உத்தம்குமார் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்தார். கட்டக் மாதக்கணக்காக மருத்துவமனையில் இருந்தார். சைந்தியாவில் வேலை செய்துகொண்டே ஷுரமாதி அடிக்கடி கல்கத்தாவிற்கு வந்து கட்டக்கைக் கவனித்தார்.

நோய் ஓரளவிற்குக் குணமாகி வெளியே வந்த கட்டக்கை மீண்டும் நடிகர் பிஸ்வஜித் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து அவர் திரட்டிய பணத்தினால் கட்டக்கின் கனவுத் திரைப்படமான ஜுக்தி தக்கொ ஆர் கப்போ வும் எடுத்துமுடிக்கப்பட்டது. படம் ஓடவில்லை என்றாலும் தனது பொருளாதார நிலைமை மேம்பட்டதாகவும் தான் கல்கத்தாவில் புதுவீடு வாங்கி அங்கே ஒரு புதுவாழ்வை அமைக்கப் போவதாகவும் ஷுரமாதிக்கு கடிதம் எழுதினார் கட்டக். பின்னர் திடீரென்று ஒருநாள் சைந்தியாவிற்கு வந்தார். பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார். ஆனால் குழந்தைகளிடம் அன்பாகப் பழகி அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டார். மகன் ரிதபென் பாடிய பாடல்களை ஆர்வத்துடன் கேட்டுரசித்து அவனை ஆரத்தழுவினார். ஆனால் அன்றைய இரவு அவர் அவ்வீட்டில் தங்கவில்லை.

அடுத்தநாள் காலையில் திரும்பி வந்து ஷுரமாதியிடம் கொஞ்சம் பணத்தை கடன் கேட்டார். இவ்வுலகையே மறந்தவரைப்போல் காட்சியளித்தார். பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து கிளம்பினார். ஓரிரு நாட்களில் மீண்டும் கல்கத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வந்தது. இதற்கிடையே கட்டக்கின் கலைப் பங்களிப்பைக் கருத்தில்கொண்டு அரசுக் கல்வித்துறையில் ஷுரமாதிக்கு வேலை வழங்கி பெங்கால் முதலமைச்சர் உத்தரவிட்டார். அந்த உத்தரவு ஷுரமாதியின் கைக்கு வந்த அதே நாளில், அதாவது 1976 பிப்ரவரி ஆறாம் தேதி ரித்விக் கட்டக் இறந்துபோனார்.

50 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ரித்விக் கட்டக்கின் கலை அவர் வாழ்ந்த காலத்தில் மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் இறப்புக்குப் பிறகு இந்திய மாற்றுச் சினிமாவின் மிகமுக்கியமான ஆளுமைகளில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். உலகம் முழுவதும் மாற்றுச் சினிமாவைக் கவனித்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கு மத்தியில் அவர் ஓர் இதிகாச நாயகனாக மாறினார். அவர் எடுத்த பெரும்பாலான படங்களை மாற்றுச் சினிமாவின் பாடப் புத்தகங்களாக உலகம் முழுவழுதுமுள்ள திரைப்படக் கல்லூரிகள் ஏற்றெடுத்தன. முன்னோடிகள் என்று யாருமே இல்லாமல் யதார்த்தம், உணர்ச்சிநாடகம், தொன்மம் போன்றவற்றைக் கலந்து தனக்கெனத் தனித்துவமான ஒரு திரைப் பாணியை உருவாக்கியவர் என்று கொண்டாடப்பட்டார்.

“கட்டக் யாராலேயுமே முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மாமேதை. நானோ மிகவும் சாதாரணமானவள். ஒரு மாமேதையுடன் ஒரு சாதாரணப்பெண் வாழும்போது நிகழும் புரிதலின்மைகள்தாம் என்னை அப்போது அலக்கழிக்க வைத்தன. மேலும் சற்று புரிதலுடனும் தெளிவுடனும் நான் இருந்திருக்காலாம். இப்போது வருத்தப்பட்டு பயனில்லையே” என்று கட்டக்கின் மரணத்திற்குபின் ஷுரமாதி சொன்னார். ஆனால் அப்போதும் அவரது வாழ்க்கை துயரங்களிலிருந்து துயரங்களுக்குத்தான் பயணித்துக்கொண்டிருந்தது.

அதீதமான அறிவுக் கூர்மையை வெளிப்படுத்திய அவரது மகன் ரிதபென் நல்ல ஓவியராகவும் நன்றாகப் பாடக்கூடியவராகவும் இருந்தார். அவர் ஒரு திரைப்பட இயக்குநராக வருவார் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால் கடுமையான மனநோயினால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் ஓர் அறைக்குள்ளே ரிதபென் கட்டக் அடைபட்டுப் போனார். ஷுரமாதியின் இளைய மகள் ஸுசிஸ்மிதா கட்டக் ஓவியராகவும் சிற்பக்கலைஞராகவும் தன்னை முன்வைத்தவர். ஆனால் எதிலுமே சோபிக்கமுடியாமல் இளவயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப் பலவகையான நோய்களால் பீடித்து தனது 49ஆவது வயதிலேயே அவர் இறந்துபோனார்.

ஷுரமாதியின் மூத்த மகளான சம்ஹிதா கட்டக் தனது தந்தையின் மரபுரிமைச் செல்வங்களை மீட்டெடுக்கப் பாடுபட்டவர். சம்ஹிதாவின் ஒரே மகள் அதிதி கட்டக் 2012 நவம்பர் 30 அன்று ஷுரமாதியின் வீட்டிலிருந்து நண்பர்களைச் சந்திக்கப்போனாள். பத்தொன்பதே வயதான அவள் அன்று இரவில் கல்கத்தா நகரின் ஒரு கால்வாய்க்குள்ளே இறந்து கிடந்தாள். விபத்து என்று காவல்துறை அதை எழுதித்தள்ளியது. தன் மகளை யாரோ திட்டம்போட்டுக் கொலை செய்தார்கள் என்று நம்பிய சம்ஹிதா கட்டக் அத்துயரத்திலிருந்து மீளமுடியாமல் அறுபது வயதாகும் முன்னே இறந்துபோனார்.

வாழ்க்கையின் எண்ணற்ற கொடூரங்களை சந்தித்துக்கொண்டு நீண்டகாலம் வாழநேர்ந்த ஷுரமாதி தனது முதியவயது முழுவதும் தன் கணவரின் புகைப்படங்களை, புத்தகங்களை, திரைப்படங்களை, திரைக்கதைகளை, கடிதங்களைச் சேகரிப்பதில் செலவிட்டார். எந்த வசதிகளுமேயில்லாத இடுங்கலான தனது வீட்டின் பூட்டப்பட்ட அறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கும் தனது மகனின் மனநோய்க் கதறல்களுக்கு நடுவே வாழ்ந்தார். ரித்விக் கட்டக்கின் புகைப்படங்கள் சூழ்ந்த அறையில் அவரது படத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டே தூங்கினார். இன்று தனது துயரங்களிலிருந்து என்றைக்குமாக ஓய்வுபெற்று ரித்விக் கட்டக்குடன் மரணத்தில் இணைந்திருக்கிறார் ஷுரமாதி. கட்டக்கின் நிரந்தரக் காதலிக்கு இந்த எளிய ரசிகனின் பிரியாவிடை.

* ஷுரமா அக்கா என்பதன் பெங்காலி வடிவம்
** அப்போது கிழக்குப் பாகிஸ்தான்


1

(1982ல் நடந்த நிகழ்வு. விகடன் தடத்தில் எழுதும் சினிமா வெறியின் 40 ஆண்டுகள் எனும் தொடரிலிருந்து)

கட்டப்பனை சங்கீதாவில் தர்சனா திரைப்படச் சங்கத்தின் சினிமாத் திரையிடல் ஆரம்பிக்கப் போகிறது. ரித்விக் கட்டக் இயக்கிய சுவர்ண ரேகா எனும் படம். ஆனால் தர்சனாவின் உறுப்பினர்களுக்கு மட்டும்தாம் அனுமதி. எல்லா நாட்களையும்போல் சீட்டெடுத்து உள்ளே செல்ல முடியாது. அடையாள அட்டை வேண்டும். சங்கத்தின் உறுப்பினரும் எங்களது அண்டை வீட்டுக்காரருமான ஓவியர் விஜயன் வரும்போது எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அவருடன் உள்ளே போகலாம் என்று திட்டம்போட்டு அந்த அரங்கிற்கு வெளியே திரிந்தேன். ஆனால் விஜயன் அன்றைக்கு வரவேயில்லை! திரையரங்கின் முன்னால் சதா காணப்படும் காலிப்பயல்களில் ஒருவனான என்னை காவல்காரனுக்குத் தெரியும். அவரிடம் “நானும் படம் பாக்கலாமா?” என்று கேட்டேன். “அய்யோ.. இது பசங்க பாக்கற படம் கெடயாது. தரிசனாவோட ஆள் அல்லாம யாரயும் உள்ளே விட முடியாது” என்று சொன்னார். ஆனால் சீட்டுக்கான காசை ரகசியமாக அவருக்குக் கையூட்டாகத் தந்தால் படம் தொடங்கி சற்று நேரம் கழித்து உள்ளே விடுகிறேன் என்றார். முன்வரிசையின் மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் அமர்ந்துகொள்ளவேண்டும்.

பதுங்கி உள்ளே சென்று முன்வரிசையின் மூலையிலேயே அமர்ந்தேன். மிகவும் பின்னால் ஓரிரு வரிசை இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் இருந்தனர். நான் முன்பு பார்த்த ம்ரிகயா போன்ற ஒரு ஹிந்திப் படம்தான் சுவர்ண ரேகா என்றுதான் நினைத்தேன். ஆனால் இது என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு மொழி! படம் மிகவும் மந்தமாக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்தது. அலுப்பைத் தாங்கமுடியவில்லை. வெளியே போகலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால் மெல்ல மெல்ல அந்த பெங்காலி திரைப்படமும் அதன் காட்சிகளும் எனக்குப் புரியத் தொடங்கின. ’ஆஜ் தானேர் கேதே ரௌத்ர சாயாய் லூகோ சூரீ கேலா..’ அப்பாடல்களும் காட்சிகளும் என் மனதிற்குள் பதிந்தன. நீளமான படமாகயிருந்தும் மற்ற திரைப்படங்களிருந்து அதுவரைக்கும் கிடைக்காத ஓர் அனுபவத்தினால் நிறைந்த மனத்துடன்தான் திரையரங்கைவிட்டு அன்றைக்கு வெளியே வந்தேன்.

2

ரித்விக் கட்டக் மனநலக் காப்பகத்திலிருந்தபோது அவரது சிகிச்சைக்கான பண உதவிகளைச் செய்தவர் கட்டக்கின் மேகே டாக்கா தாரா, கோமள் காந்தார், சுவர்ண ரேகா போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான மகேந்திர குமார். இந்திய மாற்றுச் சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் அவர். இளவயதில் வீட்டை விட்டு ஓடிவந்த மகேந்திர குமாரைக் கண்டெடுத்து வழிநடத்தி ஓர் ஒளிப்பதிவாளராக்கியவர் கட்டக். ஆனால் அவர் ஷுரமா கட்டக்கை மௌனமாக காதலித்தார். ஷுரமாவுடன் சேர்ந்துவாழ விரும்பினார். இது எதுவுமே ஷுரமாவிற்குத் தெரியவில்லை என்றாலும் கட்டக்கிற்குத் தெரிந்தது. அதைச் சொல்லி கட்டக்கும் மகேந்திர குமாரும் சண்டை போட்டனர். அது பெரும் கைகலப்பில் முடிந்தது. கட்டக்கை மகேந்திர குமார் மோசமாக அடித்துக் காயப்படுத்தினார். குடிபோதையில் நடந்த சண்டை என்று அது ஷுரமாவுக்குச் சொல்லப்பட்டது. தனது கணவரை அடித்தமைக்கு ஷுரமா மகேந்திர குமாரை வன்மையாகக் கண்டித்தார். கடுமையாகக் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார். கட்டக் இறந்து பல ஆண்டுகள் கழித்துதான் அந்தச் சண்டையின் உண்மைக் காரணம் ஷுரமாவுக்குத் தெரிய வந்தது. திருமணமே செய்யாமல் உறவினர்களற்று வாழ்ந்த மகேந்திர குமார் 2016 அக்டோபர் 4 அன்று தனது 81ஆவது வயதில் அனாதையாக இறந்து கிடந்தார். அரசுச் சவக்கிடங்கில் பல வாரங்கள் கிடந்த அவரது சடலத்தை ஏற்றெடுக்க யாருமே முன்வரவில்லை.

நன்றி : படச்சுருள்